சுங்கச்சாவடியை சுற்றி 60 கி.மீ-க்குள் வீடு இருந்தால் டோல் கிடையாது என்று நிதின் கட்கரி கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

நெடுஞ்சாலை “சுங்கச்சாவடி (டோல்கேட்) அமைந்துள்ள இடத்தைச் சுற்றி 60 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்கள் அந்த குறிப்பிட்ட டோல் கேட்டில் கட்டணம் செலுத்த வேண்டாம். ஆதார் காட்டி செல்லலாம்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாக சிலர் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில் தமிழில், “உங்கள் வீட்டிலிருந்த 60 கி.மீ-க்குள் டோல்கேட் ஃபீஸ் கட்ட வேண்டாம். ஆதார் அட்டை காட்டி கடந்து செல்லலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

நிலைத் தகவலில், “உங்கள் வீட்டிலிருந்து 60 கி.மீ – க்குள்… டோல்கேட் ஃபீஸ் கட்ட வேண்டாம். ஆதார் அட்டை காட்டி கடந்து செல்லலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டோல்கேட் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி 60 கி.மீ பகுதியில் வசிப்பவர்கள் அந்த குறிப்பிட்ட சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. இந்த வீடியோவை பார்க்கும் போது பழைய நாடாளுமன்ற மக்களவையில் நிதின் கட்கரி பேசியது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த வீடியோ புதியது இல்லை என்பது உறுதியானது.

அடுத்ததாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதில் உள்ள நிதின் கட்கரி பேசிய தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். கூகுளில் 60 கி.மீ, டோல்கேட் கட்டணம், ஆதார், நிதின் கட்கரி என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது 2022ம் ஆண்டு மக்களவையில் நிதின் கட்கரி பேசிய வீடியோ மற்றும் செய்திகள் பல நமக்குக் கிடைத்தன.

60 கி.மீ விதி என்று நிதின்கட்கரி பேசியதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்திகளில், “60 கி.மீ தூரத்துக்கு ஒரே ஒரு டோல்கேட் இருப்பது உறுதி செய்யப்படும். 60 கி.மீ தொலைவுக்குள் 2 டோல்கேட் இருந்தால் அதில் ஒன்று அடுத்த மூன்று மாதங்களுக்குள் அகற்றப்படும்” என்று நிதின் கட்சி நாடாளுமன்றத்தில் பேசினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் டோல் பிளாசாவுக்கு அருகில் வசிக்கும் மக்கள் தங்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து பாஸ் பெற்று பயணிக்கலாம் என்று கூறினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பாஸ் பெற டோல் பிளாசாவுக்கு அருகில் எத்தனை கி.மீ சுற்றளவுக்குள் வசிக்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியதாக எந்த தகவலும் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive

நிதின் கட்கரி இந்தியில் பேசிய வீடியோவை இந்தி தெரிந்தவர்களிடம் அனுப்பி அவர் பேசியது தொடர்பாக கேட்டோம். அவர்களும் 60 கி.மீ தூரத்துக்கு ஒரு டோல் பிளாசா இருக்கும் என்றும் டோல் பிளாசாவுக்கு அருகில் வசிப்பவர்கள் ஆதார் அட்டையைக் காட்டி பாஸ் பெற்று இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் கூறியதாக தெரித்தனர். இதன் மூலம் 60 கி.மீ சுற்றளவுக்குள் வசிப்பவர்கள் டோல் கட்டணம் கட்ட வேண்டாம் என்ற தகவல் தவறானது என்பது உறுதியானது.

Archive

டோல் பிளாசாவுக்கு அருகில் வசிப்பவர்கள் ஆதார் காண்பித்து பாஸ் பெறலாம் என்று கூறியிருந்தார். எத்தனை கி.மீ-க்குள் வசிப்பவர்களுக்கு இந்த சலுகை உள்ளது என்று அறிய கூகுளில் தொடர்ந்து தேடினோம். மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணையதளத்தில் நமக்கு அந்த தகவல் கிடைத்தது. வணிக பயன்பாட்டுக்கு அல்லாத மெக்கானிக்கல் வாகனத்தை வைத்துள்ள நபர் தேசிய நெடுஞ்சாலை, மேம்பாலம், பைபாஸ், சுரங்கப்பாதை என எந்த ஒரு கட்டண சாலைக்கும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட விதி படி மாதத்துக்கு ரூ.150 செலுத்தி பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இதன் படி வாகனத்தின் ஓட்டுநர் அல்லது உரிமையாளர் டோல் பிளாசாவுக்கு 20 கி.மீ சுற்றளவு பகுதிக்குள் வசிப்பவராக இருந்தால் இந்த பாஸ் பெற முடியும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: morth.nic.in I Archive 1 I tis.nhai.gov.in I Archive 2

தமிழ்நாட்டில் உள்ள டோல்கேட்டில் தற்போது எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்று அறிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள டோல் பிளாசாக்கள் பட்டியலிலிருந்து தமிழகத்தில் உள்ள ஒரு டோல் பிளாசாவின் விவரத்தை எடுத்தோம். அதில் தற்போது 330 ரூபாய்க்கு பாஸ் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன் மூலம் சுங்கச்சாவடியில் 60 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்கள் ஆதார் அட்டையைக் காட்டிவிட்டு இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது. 

நம்முடைய ஆய்வில் அமைச்சர் நிதின் கட்கரி, 60 கி.மீ தூரத்திற்கு ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும், இரண்டாவதாக ஒரு சுங்கச்சாவடி இருந்தால் அது அகற்றப்படும் என்று 2022ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை தவறாக பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 கி.மீ சுற்றளவில் உள்ளவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட சுங்கச்சாவடியைப் பயன்படுத்த பாஸ் வழங்கப்படுகிறது என்பதையும் அதுவும் ஆதார் அட்டையைக் காட்டி மாதாந்திர பயணச்சீட்டாக (பாஸ்) பெற்றுப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். 

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

60 கி.மீ தூரத்திற்கு ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் என்று 2022ம் ஆண்டு நிதின் கட்கரி பேசிய வீடியோவை தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சுங்கச்சாவடியை சுற்றி 60 கி.மீ-க்குள் வீடு இருந்தால் டோல் கிடையாது என்று நிதின் கட்கரி கூறினாரா?

Written By: Chendur Pandian  

Result: False