‘வங்கதேச குழந்தைகள் மீது தாக்குதல்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

வங்கதேசத்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 

வெடிகுண்டு தாக்குதலில் தப்பித்து, உடல் முழுக்க புழுதியால் மூடப்பட்ட ஒரு சிறு குழந்தை அமர்ந்திருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நன்றாக பாருங்க பங்களாதேஷில் குழந்தை எப்படி இருக்கு பாருங்க, அந்த குழந்தையின் நிலையைப் பாருங்கள், அந்த குழந்தையின் அரணை கொடியை எப்படி புடுங்குறான் பாருங்கள், மதம் இனம் மொழி வேறு ஆக இருந்தாலும் குருதி என்பது ஒரே நிறம்

ஒரு உயிரை உண்டாக்குவது எவ்வளவு கடினம் ஆனால் இங்கேயே சுலபமாக எடுத்து விடுகின்றனர். மனிதநேயம் என்பது மக்களிடையே இறந்து போய்விட்டன. கலியுகம் ஆரம்பம் இதுவே சாட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அல் ஜசீரா ஊடகம் வெளியிட்ட வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில் அரபியில் எழுதப்பட்டுள்ளது. குழந்தையைப் பார்க்கும் போது அரபு பகுதி குழந்தை போல உள்ளது. வங்கதேச குழந்தை போல இல்லை என்பதால் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் இணையதளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது வங்கதேசம் என்று குறிப்பிட்டு சிலரும். காசாவில் உள்ள பள்ளி மீது நடந்த தாக்குதல் என்று குறிப்பிட்டு வேறு சிலரும் பதிவிட்டிருந்த பதிவுகள் நமக்குக் கிடைத்தன. 

எனவே, வீடியோவில் உள்ள அரபு வார்த்தைகளை கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழிபெயர்த்துப் பார்த்தோம். அதில், நுசிராத் முகாம், காசா (Nuseirat camp, Gaza) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: aljazeera.com I Archive

இதன் அடிப்படையில் கூகுளில் நுசிரத் முகாம், காசா, பள்ளி மீது தாக்குதல் என்று சில அடிப்படை வார்த்தைகளை டைப் செய்து தேடிப் பார்த்தோம். அப்போது இந்த குழந்தையின் புகைப்படத்தடன் அல் ஜசீரா வெளியிட்டிருந்த செய்தி நமக்கு கிடைத்த. அதில். ஜூலை 14, 2024 அன்று காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளி மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு அதிர்ச்சியில் அழும் ஜெய்னா எல் கர்னாவி (Zeyna El Karnawi) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை அல்ஜசீரா அரபு வெளியிட்டிருந்தது. அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தின் முழு வீடியோவை கண்டறிந்தோம். குழந்தையின் இடுப்பிலிருந்து அரணை கொடியை திருடுகிறார்களா என்பது பற்றி எந்த தவலும் அந்த செய்தியில் இல்லை. வீடியோவை பார்க்கும் போது குழந்தைக்கு அடிபட்டிருக்கிறதா என்று பரிசோதிப்பது போல் தெரிகிறது. அது தொடர்பாக நம்மால் உறுதி செய்ய முடியவில்லை. 

நம்முடைய ஆய்வில் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோ வங்கதேசத்தைச் சார்ந்தது இல்லை என்பதும் அந்த வீடியோ 2024 ஜூலை மாதம் காசாவில் உள்ள ஒரு பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தை அது என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோவை வங்கதேசத்தில் குழந்தைகள் மீது தாக்குதல் என்று தவறாக பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘வங்கதேச குழந்தைகள் மீது தாக்குதல்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False