
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் மசூதி ஒன்றுக்குள் மறைக்கப்பட்டிருந்த கோவில் என்று ஒரு பிரம்மாண்ட கோவில் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
பிரம்மாண்ட குகைக் கோவில் சிலை படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “கர்நாடகா ரெய்ச்சூர் மசூதிக்குள் மறைக்கப்பட்ட கோவில். ரெய்ச்சூரில் சாலை விரிவாக்க பணிக்காக பள்ளிவாசலை இடித்தபோது, மறைக்கப்பட்ட தேவி ஆலயம் வெளிவந்தது. வாழ்க இந்துக்களை வஞ்சிக்கும் உங்கள் மதச்சார்பின்மை” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Selva Rangam என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 நவம்பர் 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பள்ளிவாசலை இடித்தபோது மறைக்கப்பட்ட கோவில் என்று பகிரப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும்போது மிக பிரம்மாண்டமாக உள்ளது. அதுவும் குகைவரைக் கோவில் போல உள்ளது. படிகள், கைப்பிடி என்று ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால், படத்தில் உள்ள நபர்கள் போட்டோஷாப்பில் வைக்கப்பட்டவர்கள் போல உள்ளன.
இவ்வளவு பெரிய கோவிலை மறைத்து பள்ளிவாசல் கட்டுவதாக இருந்தால் மிக பிரம்மாண்டமானதாக இருந்திருக்க வேண்டும். அதை எப்படி இடித்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. ரெய்ச்சூரில் மசூதி இடிக்கப்பட்டது உண்மையா, அதில் இந்து கோவில் இருந்தது உண்மையா என்று தேடிப் பார்த்தோம்.
2016ம் ஆண்டு சாலை விரிவாக்கப் பணிக்காக ரெய்ச்சூரில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இரண்டு மசூதி மற்றும் ஒரு கோவிலில் சில பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால், மசூதிக்குள் கோவில் இருந்ததாக எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் முடிந்து இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், 2016 ஏப்ரல் 15ம் தேதி வெளியான டெக்கான் கிரானிக்கிள் நாளிதழில், மசூதிக்குள் இந்து கோவில் தூண்கள் இருந்ததாக இந்து அமைப்புக்கள் குற்றம்சாட்டியதாக குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
thehindu.com | Archived Link 1 |
deccanchronicle.com | Archived Link 2 |
deccanherald.com | Archived Link 3 |
டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியான செய்தியில் படமும் இருந்தது. அதில், சாலை விரிவாக்கப் பணிக்காக மசூதி மற்றும் கோவில் இடிக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தனர். மசூதி படத்தை பெரிதாக வைத்துவிட்டு, சிறிய அளவில் கோவில் படத்தை போட்டோஷாப் மூலம் இடிக்கப்பட்ட மசூதி படத்துக்கு உள்ளே வைத்திருந்திருந்தனர். படத்தின் புட் நோட்டில், ராமர் கோவில் (உள்ளே) என்று குறிப்பிட்டிருந்தனர். அதாவது, இரண்டு படங்களும் ஒன்று சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்ற அர்த்தத்தில் அந்த புட் நோட் இருந்தது.
இந்த தேடலின்போதே, ரெய்ச்சூரில் மசூதிக்கு உள்ளே கோவில் இருந்ததாக பகிரப்படும் தகவல் வதந்தி என்று வெளியான சில கட்டுரைகளும் நமக்கு கிடைத்தன. அதில், இந்த புகைப்படம் உள்ள குகை சீனாவில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகைப்படத்தில் Chandra Colourist என்று ஒரு லோகோ இருந்தது. ஃபேஸ்புக்கில் அப்படி ஒரு பெயரில் யாராவது உள்ளார்களா என்று தேடினோம். அப்போது ஒரு ப்ரொஃபைல் நமக்கு கிடைத்தது. அதில் மேற்கண்ட படம் உள்ளதா என்று தேடினோம். நம்முடைய தேடலில் படம் கிடைத்தது. ஆனால் அதில் அவர் ரெய்ச்சூரில் உள்ள கோவில் என்றோ, மசூதிக்குள் இருந்த கோவில் என்றோ குறிப்பிடவில்லை. அக்ஷயதிருதியை வாழ்த்துக்கள் என்று கூறி இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். அதற்கு ஒருவர் இந்த கோவில் எங்கே உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு Chandra Colourist, இது என்னுடைய டிஜிட்டல் படைப்பு என்று பதில் அளித்துள்ளார். Chandra Colourist தன்னுடைய விருப்பம்போல தயாரித்த படத்தை வைத்துக்கொண்டு அவதூறு பரப்பியது தெரியவந்தது.
Facebook Link | Archived Link |
நம்முடைய தேடலில் அந்த குகை படத்தை சீனாவின் புகழ் மிக்க லுங்மன் கற்குகையில் இருந்து எடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது. Chandra Colourist வெளியிட்ட டிஜிட்டல் படைப்பு படத்தையும் லுங்மேன் கற்குகை படத்தையும் ஒப்பிட்டு ஏஎஃப்பி படம் வெளியிட்டிருந்தது. இந்த படத்தை வடிவமைத்தவரே இது அசல் இல்லை என்று கூறியநிலையில் நாம் தனியாக ஒப்பீடு எதையும் செய்யவில்லை.
actcheck.afp.com | Archived Link |
மற்றொரு உண்மை கண்டறியும் ஆய்வில், மசூதி இடிக்கப்பட்டபோது பணியில் இருந்த அதிகாரியிடம் பேசியதாகவும், மசூதி மிகவும் பழமையான கட்டிடம். அந்த காலத்து தூண் அது. வெறும் தூணை மட்டும் வைத்துக்கொண்டு அங்கு இந்து கோவில் இருந்தது என்று கூறுவது தவறானது. இது வெறும் வதந்தி” என்று கூறியதாக பதிவிட்டிருந்தனர். ஆனால், அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதன் அடிப்படையில் இந்த படம் தவறானது என்று தெரிந்தது. போலியான படத்தை வெளியிட்டு உரிமைக்காக போராடும் நபர் போல தன்னைக் காட்டிக்கொள்ளும் பதிவை வெளியிட்ட நபரின் அறியாமையை நினைக்கும்போது வேடிக்கையாக உள்ளது.
நம்முடைய ஆய்வில்,
2016ம் ஆண்டு ரெய்ச்சூரில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் வழிபாட்டுத் தலங்கள் சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இடிக்கப்படும்போது மசூதியில் இந்து கோவில் இருந்தது என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை.
சில மாதங்கள் கழிந்த நிலையிலேயே அங்கு இந்து கோவில் இருந்திருக்கலாம் என்று வதந்தி பரப்பப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படம் உண்மையில் ஒரு கோவில் இல்லை என்று, அதை உருவாக்கியவரே விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தின் குகை சீனாவில் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் மசூதியை இடித்தபோது வெளிப்பட்ட பிரம்மாண்ட இந்து கோவில்” என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கர்நாடகாவில் மசூதிக்குள் மறைக்கப்பட்ட பிரம்மாண்ட கோவில் இதுவா?
Fact Check By: Chendur PandianResult: False
