விஜய் மாநாட்டுத் திடலில் கீர்த்தி, திரிஷா கட்அவுட் என்று பரவும் விஷம புகைப்படம்!

அரசியல் | Politics தமிழ்நாடு | Tamilnadu

நடிகர் விஜய்யின் தவெக மாநாட்டுத் திடலில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், திரிஷா கட்அவுட் வைக்கப்பட்டது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive

நடிகர் விஜய், புஸ்சி ஆனந்த், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், திரிஷா ஆகியோருக்கு கட்அவுட் வைக்கப்பட்டது போன்று புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷை பெருந்தலைவி அம்மா, நடிகர் விஜய்யை அறியாத அண்ணா, திரிஷாவை சின்னம்மா திரிஷா என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், “இப்போதான் அழகா லட்சணமா இருக்கு” என்று போட்டோஷாப் முறையில் டைப் செய்யப்பட்டிருந்தது. 

இதே போன்று டிவிகே என்றால் திரிஷா விஜய் கீர்த்தி சுரேஷ் என்பது போன்று கட்-அவுட் புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவை உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் 2024 அக்டோபர் 28ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுத் திடலில் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சட்டமேதை அம்பேத்கர் ஆகியோருடன் விஜய்-க்கு கட்அவுட் வைக்கப்பட்டது. அதனுடன் புதிதாக சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கட்அவுட் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோரின் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பதாகப் பலரும் சமூக ஊடகங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இதைப் பார்க்கும் போதே நையாண்டிக்காகச் செய்யப்பட்ட போட்டோஷாப் புகைப்படம் போல் உள்ளது. இருப்பினும் இதையும் ஏராளமானவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive

விஜய் மாநாட்டையொட்டி முதலில் நான்கு பேருக்கு கட் அவுட் வைக்கப்பட்டது. இன்னும் இரண்டு பேரின் கட் அவுட் வைக்க இடம் உள்ளது. அந்த இடத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட் வைக்கப்படலாம் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன் படி அக்டோபார் 25ம் தேதி முற்பகலில் இருவரின் கட்அவுட்களும் வைக்கப்பட்டது. இந்த ஆறு பேரின் கட் அவுட் தவிர்த்து வேறு எந்த கட் அவுட்டும் வைக்கப்படவில்லை. இந்த ஆறு கட் அவுட்கள் பற்றி வெளியான செய்திகள் நமக்கு இதை உறுதி செய்கின்றன.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் காமராஜர் கட் அவுட் படத்தை எடிட் செய்து புஸ்சி ஆனந்த் தலையை வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதே போல் நடிகைகளின் புகைப்படம் தனியாகத் தெரிகிறது. இதன் மூலம் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தவெக மாநாட்டு திடலில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், திரிஷாவுக்கு கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel I Instagram

Avatar

Title:விஜய் மாநாட்டுத் திடலில் கீர்த்தி, திரிஷா கட்அவுட் என்று பரவும் விஷம புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: ALTERED