“தி.மு.க ஆட்சியில் மோசமான நிலையில் உள்ள தமிழக சாலை” என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தி.மு.க ஆட்சியில் கார் ரேஸ்க்கு ரோடு போட நிதி உள்ளது, ஆனால் மக்களுக்கு சாலை அமைக்க நிதி இல்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பார்முலா கார் ரேஸ் புகைப்படம் மற்றும் சாலையில் மிகப்பெரிய பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் புகைப்படம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ""சிங்கார" சென்னை ?! கார் ரேஸுக்கு ரோடு போட நிதி இருக்கு... மக்களுக்கு ரோடு போட நிதி இல்லையா M. K. Stalin ஐயா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் சாலை அமைக்க நிதி இல்லாமல் சாலைகள் எல்லாம் மிகவும் மோசமான நிலையில் இருப்பது போலவும், இந்த சூழலில் கார் ரேஸ் நடத்தச் சாலைகள் அமைக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் 100 சதவிகிதம் சாலைகள் சரியான நிலையில் உள்ளதா இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த பதிவில் இடம் பெற்ற புகைப்படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
சாலையில் பள்ளங்களாக இருக்கும் புகைப்படத்தை மட்டும் தனியாக எடுத்து, கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா 2020ம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குழிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2020ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட மழை காரணமாக வட சென்னை சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: timesofindia.indiatimes.com I Archive
2020ம் ஆண்டு என்பது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் ஆகும். 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தான் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இந்த புகைப்படம் தி.மு.க ஆட்சிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். இதன் மூலம் தி.மு.க ஆட்சியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று பரவும் புகைப்படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மோசமான நிலையில் உள்ள சாலையின் புகைப்படத்தை எடுத்துப் பதிவிட்டிருந்தால் அதில் நியாயம் இருந்திருக்கும். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மோசமான நிலையிலிருந்த சாலையின் புகைப்படத்தை இப்போது பகிர்ந்திருப்பதன் மூலம் தவறான தகவலைப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி இருந்த போது மோசமான நிலையில் இருந்த திருவொற்றியூர் நெடுஞ்சாலை புகைப்படத்தை எடுத்து, 2024ல் தி.மு.க ஆட்சியில் மோசமான நிலையில் உள்ள சாலை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel