
திராவிட மாடல் ஆட்சியில் புதிதாக ரூ.72 கோடியில் கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட பாலத்தில் பள்ளங்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் நியூஸ் வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட ஆரியபாளையம் மேம்பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது” என்று வாய்ஸ்ஓவர் அளிக்கப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “72 கோடியில் பாலம் கட்டி ஒரு மாதம் தான் ஆகுது.. அதற்குள் மையத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம்.. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்.. அச்சத்தில் மக்கள்..
திராவிட மாடல் பாலம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் ஆரியபாளையம் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை பலரும் தமிழ்நாட்டில் இந்த பாலம் உள்ளது போலவும் திராவிட மாடல் பாலம் என்றும் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகின்றனர். செய்தியிலும் இந்த பாலம் தமிழ்நாட்டில் உள்ளதா, புதுச்சேரியில் உள்ளதா என்று குறிப்பிடவில்லை. போதிய விவரம் அளிக்காமல் பார்ப்பவர்கள் தவறான புரிந்துகொள்ளும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை அதன் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்தோம். அதில் கூட இந்த பாலம் எங்கு உள்ளது என்று குறிப்பிடவில்லை. “72 கோடியில் பாலம் கட்டி ஒரு மாதம் தான் ஆகுது.. அதற்குள் இப்படியா..?
72 கோடியில் பாலம் கட்டி ஒரு மாதம் தான் ஆகுது.. அதற்குள் மையத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம்.. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்.. அச்சத்தில் மக்கள்..” என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். ஆனால். ஹேஷ்டேக்-ல் புதுச்சேரி என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால், இந்த பாலம் புதுச்சேரியில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆரியபாளையம் பாலம் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, இந்த பாலம் புதுச்சேரியில் இருப்பது தெரியவந்தது. மேலும் இது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் என்பதும் தெரியவந்தது. தேசிய நெடுஞ்சாலை பாலத்தை எல்லாம் மாநில அரசு கட்டாது என்பதால் திராவிட மாடல் பாலம் என்று கூறுவதே தவறானது என்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive
இந்த பாலம் தொடர்பாக தினத்தந்தியில் வெளியான விளக்கமான செய்தி கிடைத்தது. 2020ம் ஆண்டு ஆரியபாளையத்தில் பாலம் கட்டப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தாராம். ஆனால் அதன் பிறகு பணிகள் எதுவும் நடக்கவில்லை. 2022ம் ஆண்டு மழை வெள்ளத்தில் அந்த பாலம் மூழ்கியது. அப்போது அதை பார்வையிட்ட அப்போது துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் விரைவில் பாலம் கட்டப்படும் என்று அறிவித்தனர். அதன் அடிப்படையில் ரூ.92.74 லட்சம் கோடியில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: dailythanthi.com I Archive
ஆரியபாளையம் புதுச்சேரியில் உள்ள பகுதி என்பதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடினோம். வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி அது என்று சில பதிவுகள் நமக்குக் கிடைத்தன. மேலும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் பட்டியலில் ஆரியபாளையம் ஊர் பெயரும் இருந்தது. தபால் பின்கோடு விவரம் அறியும் இணையதளத்தில் ஆரியபாயைம் புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலையத் துறை கட்டுப்பாட்டில் அந்த சாலை, பாலம் உள்ளது. அப்படி இருக்க தமிழ்நாடு அரசு மீது குற்றம்சாட்டுவதற்கு எந்த காரணமும் இல்லை.
இந்த ஆதாரங்கள் எல்லாம் இந்த பாலத்தைக் கட்டியது தமிழ்நாடு திமுக திராவிட மாடல் அரசு என்று கூறுவதைத் தவறு என்பதை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டது தொடர்பான செய்தியை, தமிழ்நாட்டில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“திறக்கப்பட்டு ஒரு மாதமே ஆன திராவிட மாடல் பாலத்தில் விரிசல்” என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
