
இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு டெலிவரி செய்வோம் என்று சொமேட்டோ அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்” என Zomato நிறுவனம் அறிவிப்பு. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ட்விட்டரில் Reject Zomato என்ற ஹேஸ் டேக் டிரென்டிங்கில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Chennai Pattinam என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 அக்டோபர் 19 அன்று பதிவிட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழகத்தைச் சேர்ந்த சொமேட்டோ வாடிக்கையாளர் ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக வரவில்லை என்று புகார் கூறியுள்ளார். அவருக்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றிய நபருக்கும் இடையே நடந்த உரையாடலில், இந்தி இந்தியாவின் தேசிய மொழி, எல்லோரும் கொஞ்சமாவது இந்தியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சேவை மையத்தை சேர்ந்த நபர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து நடந்த சம்பவத்துக்கு சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டது. மேலும், இந்தி கற்க வேண்டும் என்று கூறிய ஊழியரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. அதன் பிறகு சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், அந்த பணியாளருக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று கூறினார்.
இந்த சூழலில், இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே சோமேட்டோவில் உணவு விற்பனை செய்யப்படும் என்று அந்த நிறுவனம் கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இதையும் பலர் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளைப் பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் அக்டோபர் 19 என்று தேதி குறிப்பிட்டிருந்தனர். புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்ட போது, அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனுக்கு அனுப்பி இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் ஒருவர் தமிழ் மொழி தொடர்பாக கூறியதற்கு அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தது. பின்னர், அறியாமல் செய்த தவறு என்பதால் அவருக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியது. இப்படி இருக்கும்போது, இந்தி தெரிந்தால் மட்டுமே உணவு விற்பனை செய்யப்படும் என்று அந்த நிறுவனம் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு விற்பனை என சொமேட்டோ அறிவித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு டெலிவரி என்று சொமேட்டோ அறிவித்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
