
‘’திருப்பதி கோயிலில் மகனுக்கு துலாபாரம் செய்த சீமான்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த தகவலை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் மூலமாக (9049053770) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டிருந்தார்.
இந்த தகவல் முதலில், ட்விட்டரில் பகிரப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதற்கடுத்தப்படியாக, இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டரிலும் பலர் ஷேர் செய்வதை கண்டோம்.
உண்மை அறிவோம்:
தமிழ்த் தேசிய அரசியல் பேசிவரும் சீமான், தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிறமொழி மக்கள் அரசியல், பொருளாதார ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாகக் கூறி, அவர் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் பிற மொழியினர் வழிபடும் கோயில் என்ற பாரபட்சம் இன்றி ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சென்று, அவரது மகனுக்கு துலாபாரம் செலுத்தியதாகவும், இது புரியாமல் அவரது கட்சியினர் தமிழர் – தெலுங்கர் என்ற வேறுபாடு பார்த்து வீண் வம்பு செய்வதாகவும் கூறி, இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில், இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது, சீமான் திருப்பதி கோயிலுக்குச் சென்று துலாபாரம் செய்தாரா என விவரம் தேடினோம். நீண்ட தேடலுக்குப் பின் இதுபற்றி நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள், ட்விட்டரில் தகவல் பகிர்ந்ததை கண்டோம்.
சீமான், திருப்போரூர் முருகன் கோயிலுக்குச் சென்றதாகக் குறிப்பிட்டே, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஜனவரி 11, 2021 அன்று தகவல் பகிர்ந்திருக்கின்றனர்.
தவிர, திருப்பதி கோயிலில் துலாபாரம் செய்த சீமான் என்று கூறி பகிரப்படும் கருத்துகளுக்கு, மேலும் சில நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி இருந்ததையும் கண்டோம்.
இந்த புகைப்படம் பற்றி கூடுதலாக, ஆய்வு செய்ததில், அதில் ‘’துலாபாரம்’’ என்று தமிழில் எழுதப்பட்டுள்ளதைக் கண்டோம். திருப்பதி கோயிலில் இப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை.

இதுவே, திருப்பதி கோயிலில், துலாபாரம் செலுத்தும் இடம் எப்படி உள்ளது என்று தகவல் தேடியபோது, அது முற்றிலும் வேறு ஒன்றாக இருந்ததை அறிந்தோம்.

இதுதவிர, திருப்போரூர் கந்தசாமி கோயிலில்தான் குறிப்பிட்ட துலாபார மேடை உள்ளது என்பதை நிரூபிக்க ஏதுவாக, ஒரு வீடியோ காட்சி நமக்கு கிடைத்தது.
இந்த வீடியோவின் 3.43 நிமிடத்தில், சீமான் பற்றி பகிரப்படும் அதே துலாபார மேடை இருப்பதைக் காண முடிகிறது. எனவே, திருப்போரூர் கோயிலில் எடுத்த புகைப்படத்தைச் சிலர் திருப்பதி என்று கூறி, சமூக வலைதளங்களில் குழப்பம் ஏற்படுத்தி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சீமான் மகனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் துலாபாரம் நடத்தப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
