
அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பார்ப்பனியமும் ஒன்றிணைந்து உலகை சீரழிக்க முயலும் முயற்சியை 2024ல் கருணாநிதி பிரதமர் ஆகி தவிடுபொடியாக்குவார் என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டது போன்ற ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “அறம் மீறி அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பார்ப்பனியமும் ஒன்றிணைந்து உலகை சீரழிக்க முயலும் முயற்சி 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி வெற்றி பெற்று இந்திய பிரதமர் ஆன அடுத்த நொடியில் தவிடு பொடியாகும்.. Mark My Tweet சங்கீஸ் !!” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த ஸ்கிரீன்ஷாட் பதிவை Sowmya R என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
செந்தில்வேல் பெயரில் போலியான ட்விட்டர் பக்கம் உள்ளது. அதில் வெளியான பதிவுகளை வைத்து செந்தில்வேல் விஷமத்தனமாக, விஷயம் தெரியாமல், அறிவிலி போன்று ட்வீட் வெளியிட்டார் என்று பல பதிவுகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

தற்போது, மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆவார் என்று கூறுவதற்கு பதில் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் முத்துவேல் கருணாநிதி இந்திய பிரதமராக ஆவார் என்று செந்தில்வேல் கூறியதாக பதிவிட்டு, அவரை விமர்சித்து வருவதைக் காண முடிகிறது. எனவே, இந்த ட்வீட் பதிவு உண்மையில் செந்தில்வேல் வெளியிட்டதுதானா என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
முதலில் செந்தில் வேலின் ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதாவது, @Senthilvel79 என்ற ஐடி கொண்ட உண்மையான பக்கத்தைப் பார்த்தோம். பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து தேடிப் பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு பதிவும் இல்லை.
அடுத்ததாக, செந்தில்வேல் என்ற பெயரில் கூடுதலாக ஒரு ‘எல்’ சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள @Senthillvel79 என்ற போலியான ட்விட்டர் ஐடி கொண்ட பக்கத்தைப் பார்த்தோம். அதில், செப்டம்பர் 24, 2021 அன்று இந்த ட்வீட் வெளியாகி இருந்தது. இதன் மூலம் செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில் இவர்களாக போலியான ட்வீட்டை வெளியிட்டு, அதை செந்தில் வேல்தான் கூறினார் என்ற வகையில் விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியானது.

இதன் அடிப்படையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி பிரதமர் ஆவார் என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக பகிரப்படும் ட்வீட் உண்மையில் அவர் வெளியிட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முத்துவேல் கருணாநிதி இந்திய பிரதமர் ஆவார் என்று செய்தியாளர் செந்தில் கூறியதாக பகிரப்படும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:2024ல் கருணாநிதி பிரதமர் ஆவார்?- செந்தில் பெயரில் பரவும் போலியான ட்வீட்
Fact Check By: Chendur PandianResult: False
