சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடியதாக பரவும் வீடியோ உண்மையா?
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தீட்சிதர் வீட்டுப் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கோவிலுக்குள் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் வீட்டுப் பிள்ளைகளின் கிரிக்கெட் கிரவுண்ட். இதை ஒருவர் தட்டி கேட்டாராம் அவருக்கு அடி உதையாம். லிங்க் கமெண்ட்ஸில் பார்க்கவும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்குள் 10க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவரை தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி, செல்போனை பறித்ததாகச் செய்தி வெளியானது.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் எடுக்கப்பட்டது என்று நினைவிலிருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: thenewsmen.co.in I Archive I abplive.com I Archive
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2023 ஜூன் மாதம் இந்த வீடியோ தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி இருந்ததை காண முடிந்தது. அதில், கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர், காஞ்சிபுரத்தில் உள்ள வேதபாட சாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Instagram
வெங்கடேஷ் ஐயரின் இன்ஸ்டாகிராம் பதிவை எடுத்தோம். இந்த வீடியோவை அவர் 2023 ஜூன் 5ம் தேதி பதிவிட்டிருந்தார். அதில், காஞ்சிபுரம் வேதபாட சாலை மாணவர்களுடன் விளையாடியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் வீட்டுச் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய காட்சி என்று பரவும் வீடியோ தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
காஞ்சிபுரம் வேதபாடசாலை மாணவர்களுடன் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை சிதம்பரத்தில் கோவிலுக்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடினர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram