தமிழ்நாட்டில் திமுக அரசு கட்டிய பாலம் என்று தென்னாப்பிரிக்கா படத்தை பரப்பும் விஷமிகள்!

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தென்னாப்பிரிக்காவில் கட்டப்பட்ட சிறிய பாலம் ஒன்றின் புகைப்படத்தைத் தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கட்டியது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சிறிய அளவிலான தரைப்பாலம் ஒன்றின் இரண்டு புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பாலம் கட்டிட்ட.. வாய்க்கால் எங்கயா? கமிசன் போக கொடுத்த காசுல பாலம் மட்டும் தான் கட்ட முடிஞ்சுது… திமுக தான்டா வெத்துவேட்டு Dmkfails” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க அரசு வாய்க்கால் இல்லாத இடத்தில் பாலம் கட்டி ஊழல் செய்தது போன்று பலரும் இந்த புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். சிலர், தி.மு.க என்று குறிப்பிடாமலும், எங்கு இந்த பாலம் கட்டப்பட்டது என்ற விவரத்தை அளிக்காமலும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைப் பார்ப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் நடந்தது போன்ற தோற்றத்தையே இந்த பதிவு ஏற்படுத்தி வருகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது Greater Giyani Municipality என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த புகைப்படங்களை 2024 டிசம்பர் 7ம் தேதி பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், “எஃப் பிரிவு சாலை புனரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கிரேட்டர் கியானி நகராட்சி எங்கு உள்ளது என்று கூகுள் செய்து பார்த்தோம். அப்போது அது தென்னாப்பிரிக்காவில் உள்ளது என்பது தெரியவந்தது.

இந்த கியானி நகராட்சி பாலம் தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது Limpopo news 24/7 என்ற தென்னாப்பிரிக்க ஊடகத்தில் கிரேட்டர் கியானி நகராட்சியானது ஹோமு என்ற கிராமத்தில் செயல்படுத்தி வரும் கல்வர்ட் வகை பாலங்கள் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது என்று அறிவித்துள்ளது என்று பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தொடர்ந்து தேடிய போது இது தொடர்பாக வெளியான செய்திகள் மற்றும் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த போது கிரேட்டர் கியானி நகராட்சி வௌியிட்ட ஃபேஸ்புக் பதிவுகளும் நமக்கு கிடைத்தன. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.

முடிவு:

தென்னாப்பிரிக்கா பாலத்தை தமிழ்நாட்டில் திமுக அரசு கட்டிய பாலம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தமிழ்நாட்டில் திமுக அரசு கட்டிய பாலம் என்று தென்னாப்பிரிக்கா படத்தை பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False