அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் செய்தி உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டம் விடும் விழாவில் 3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பட்டம் பறக்கவிடும் போது குழந்தை ஒன்றும் அதனுடன் சேர்ந்து பறக்கும் அதிர்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பயத்தை காட்டிட்டாங்க பரமா… அகமதாபாத்தில், பட்டம் விடும் விழாவில், 3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற காட்சியால் அதிர்ச்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Jaya Plus தொலைக்காட்சி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2023 ஜனவரி 19ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அகமதாபாத் நகரில் பட்டம் பறக்கவிடும் விழாவில் குழந்தை ஒன்று காற்றாடியோடு சென்றது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் வீடியோ செய்தி ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. ஜெயா பிளஸ் செய்தி தொலைக்காட்சியும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. வீடியோவில் உள்ளவர்களைப் பார்க்கும் போது குஜராத்தைச் சார்ந்தவர்கள் போல இல்லை. சீனா, ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர்கள் போல உள்ளனர். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: 9news.com I Archive 1 I apnews.com I Archive 2

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. அவற்றை ஒதுக்கிவிட்டுத் தேடிய போது, இந்த வீடியோ தொடர்பாக 2020ம் ஆண்டு வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன.

AP நியூஸ், கார்டியன், ஏபிசி நியூஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த செய்திகளைப் பார்த்தோம். அதில், தைவானில் நடந்த காற்றாடி திருவிழாவின் போது பட்டத்தின் வாலில் சிக்கிக்கொண்ட 3 வயது பெண் குழந்தை வானில் பறந்தது. நல்ல வேலையாக காயம் ஏதும் இன்றி அந்த குழந்தை உயிர் தப்பியது” என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்திகளில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவையும் இணைத்திருந்தனர்.

இவை மட்டுமின்றி இந்த ஊடகங்கள் தங்களின் யூடியூப் பக்கத்தில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருப்பதும் தெரிந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ இந்தியாவின் அகமதாபாத் நகரில், 2023ம் ஆண்டு எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் காற்றாடியோடு பறந்த சிறுமி என்று பரவும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அகமதாபாத்தில் நடந்த காற்றாடி திருவிழாவில் காற்றாடியின் வாலில் சிக்கி 3 வயது சிறுமி மேலே பறந்ததாக பரவும் வீடியோ 2020ல் தைவானில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False