
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவின்போது கலைஞர் நினைவிடத்துக்கு சென்றவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அமைச்சர் ஜெயக்குமார் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல. உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “இவனுக ஏற்பாடு பண்ணின விழால தலைவன் சிக்ஸ் அடிச்சிட்டார்!” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த பதிவை இணையதள திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மதம் எதுவாயினும் மனிதனாயிரு என்ற ஐடி கொண்ட நபர் 2021 ஜனவரி 27 அன்று பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா 2021 ஜனவரி 27ம் தேதி நடந்தது. திறப்பு விழாவுக்கு வந்த அ.தி.மு.க தொண்டர்கள் பலர் கலைஞர் நினைவிடத்தின் முன்பு அஞ்சலி செலுத்துவது போல புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அனைத்து செய்தி, சமூக ஊடகங்களிலும் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகின.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இந்த நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார் என்று நியூஸ் கார்டு வைரல் ஆகிறது. கருணாநிதி மறைந்த போது அவரது உடல் அடக்கம் மெரினாவில் நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பங்கேற்றவர் அமைச்சர் ஜெயக்குமார். அப்படி இருக்கும்போது அவர் இப்படி சொல்லியிருப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நியூஸ் கார்டில் வழக்கமாக புதிய தலைமுறை பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இல்லை. பின்னணி டிசைன், வாட்டர் மார்க் லோகோ என எதுவும் இல்லை. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று தெரிந்தது. அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் ஏராளமானவர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வரவே இது பற்றிய ஆய்வை நடத்தினோம்.
முதலில், புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 ஜனவரி 27ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை.
அடுத்ததாக புதிய தலைமுறை டிஜிட்டல் ஹெட் மனோஜை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் “இது நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியானது” என்றார்.
இந்த நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி தரப்பில் உறுதிபடுத்தியதை அடுத்த இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கனுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற அ.தி.மு.க தொண்டர்கள்: ஜெயக்குமார் பெயரில் பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
