FACT CHECK: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா இது?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

எ.வ.வேலு வீட்டில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ரூ.500, ரூ.2000 நோட்டுக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரெய்டு மிரட்டலுக்கு நாங்க பயப்படமாட்டோம்.!!- துரைமுருகன். எ.வ.வேலு வீட்டில் கணக்கில் வராத 3.5 கோடி பறிமுதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை கெளதம் தங்கராஜ் என்பவர் 2021 மார்ச் 25 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2021 மார்ச் 25ம் தேதி சோதனை தொடங்கினர். இரண்டாவது நாளாக மார்ச் 26ம் தேதியும் சோதனை நடந்தது. இந்த நிலையில் எ.வ.வேலுவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.3.5 கோடி பணம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

இரண்டாவது நாளாக எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சூழலில் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்று வருமான வரித்துறை அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் ரூ.3.5 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது என்று பரவி வருகிறது. இந்த தகவல் தவறானது என்று தி.மு.க தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புகைப்படம் எ.வ.வேலு வீட்டில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, தஞ்சை மாவட்ட நகர் ஊரமைப்பு திட்ட உதவி இயக்குநர் நாகேஸ்வரன் என்பவரு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அவரிடமிருந்து 3.39 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று மாலை மலர் வெளியிட்ட செய்தி கிடைத்தது. 

அசல் பதிவைக் காண: maalaimalar.com I Archive

2021 மார்ச் 13ம் தேதி வெளியான இந்த செய்தியில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தனர். அந்த படத்தின் கீழே, “கைதான உதவி இயக்குநரின் வங்கி லாக்கரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காணலாம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த படம் மற்றும் கைது செய்யப்பட்ட நாகேஸ்வரன் படங்களை எல்லாம் கொலாஜ் செய்து கலைஞர் செய்திகள் வெளியிட்டிருந்த செய்தியும் நமக்கு கிடைத்தது. அதில், “தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கி கைதான மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் வங்கி கணக்கிலிருந்து 3.39 கோடி ரொக்கம், 173 சவரன் தங்கம் லஞ்ச ஒழிப்பு தடுப்பு துறை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: kalaignarseithigal.com I Archive

இதன் மூலம் இந்த படத்துக்கும் எ.வ.வேலு வீட்டில் நடந்த சோதனைக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது. இதன் அடிப்படையில் எ.வ.வேலு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எ.வ.வேலு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் படம் ஊழல் அதிகாரி ஒருவருக்கு உரியது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False