FACT CHECK: துபாய் மசூதியில் ராம பஜனை பாடல் பாடப்பட்டதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

துபாயில் உள்ள மசூதி ஒன்றில் இஸ்லாமி பெண்கள் ராமர் பஜனை பாடலை பாட, அதை அவர்களது கணவர்கள் கைத்தட்டி ரசித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

பர்தா மற்றும் அரபு உடை அணிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ராம பஜனை பாடல் பாடுகின்றனர். புட்டபர்த்தி சத்ய சாய்பாபா படம் உள்ளது. சில பெண்கள் பொட்டு வைத்துள்ளனர். நிலைத் தகவலில், “துபாயில் புதிய சகாப்தம்

*முஸ்லிம் பெண்கள் மசூதியில் ராமா பஜனை வழங்கினர். அவர்களின் கணவர்கள் ஷேக்குகள் கைதட்டலை ஆதரித்தனர். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை எங்கள் 135 கோடி இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Senthamarai Kannan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 15ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோ எடிட் செய்யப்பட்டது போல இல்லை, பஜனை பாடல் வாய் அசைப்பு சரியாக உள்ளது. எனவே இது ஆடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ இல்லை என்பது தெரிந்தது. அதே நேரத்தில் பாடல் பாடிய பல பெண்கள் நெற்றியில் குங்குமம் இருப்பதைக் காண முடிந்தது. ஒருவேளை துபாய் நாட்டில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்து பெண்கள் பர்தா அணிந்து பஜனையில் பங்கேற்றார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, இவர்கள் யார் என்று ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது யூடியூப் வீடியோக்கள், இலங்கை ஊடகத்தில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தது. மேலும் புட்டபர்த்தி சத்திய சாய் அமைப்பின் தி பிரஷாந்தி ரிப்போர்ட்டர் என்ற இணைய தளத்தின் செய்தியும் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: theprasanthireporter.org I Archive 1 I colombotelegraph.com I Archive 2

2012ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி இந்த செய்தியை புட்டபர்த்தி பிரஷாந்தி நிலையம் இஸ்லாமிய மயமாக காட்சி அளித்தது. மத்திய கிழக்கு நாடுகளான பக்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, சிரியா, துருக்கி மற்றும் யுஏஇ பகுதிகளில் உள்ள 94 சாய் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புட்டபர்த்திக்கு புனித பயணம் மேற்கொண்டனர். அவர்கள் பக்தர்களுடன் இணைந்து பஜனையில் ஈடுபட்டனர். ஆறு அரபி பாடல்களும் அதைத் தொடர்ந்து பஜனையும் நடந்தது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

வீடியோக்களில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இவர்கள் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 94 சாய் அமைப்பின் தொண்டர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இவர்கள் இஸ்லாமியர்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. 

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி துபாயில் உள்ள ஒரு மசூதியில் நடந்தது இல்லை, இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியில் நடந்தது என்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

துபாயில் ஒரு மசூதியில் ராம பஜனை பாடல் பாடப்பட்டது என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:துபாய் மசூதியில் ராம பஜனை பாடல் பாடப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False