
‘’ரேசன் கடைகளில் இனி சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
Claim Tweet Link I Archived Link
உண்மை அறிவோம்:
முதலில், இந்த குறிப்பிட்ட நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டதா என அந்த ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது லோகோவை பயன்படுத்தி சிலர் பரப்பும் வதந்தி,’’ என்றனர்.
அடுத்தப்படியாக, இதுபோன்ற செய்தி வேறு ஏதேனும் ஊடகத்தில் வெளியாகியுள்ளதா, என்று தகவல் தேடினோம். இப்படியான செய்தி எதுவும் அதிகாரப்பூர்வமாக எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை.
இதையடுத்து, குறிப்பிட்ட செய்தி போன்ற நியூஸ் கார்டு ஒன்று, சில ஆண்டுகள் முன்பாக, மு.க.ஸ்டாலின் படத்திற்குப் பதிலாக, எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் பகிரப்பட்டதை நாம் கண்டோம்.

இதுதொடர்பான, ஃபேஸ்புக் பதிவின் லிங்க் கீழே மீண்டும் ஒருமுறை இணைக்கப்பட்டுள்ளது.
உண்மையில், அப்போது கருப்பட்டியை ரேசனில் விநியோகிக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும் என்று அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். அதற்கு மேல் வேறு எந்த அறிவிப்பும் இதுதொடர்பாக, வெளியிடவில்லை. இதன்மூலமாக, இது அதிமுக ஆட்சிக்காலத்திலேயே பரவிய வதந்தி, என்று தெரியவருகிறது.
maalaimalar link
இறுதியாக, இந்த விவகாரம் பற்றி நாம் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.tnpds.gov.in/) சென்று பார்வையிட்டோம். இவ்வாறான அறிவிப்பு எதுவும் அங்கே காணக் கிடைக்கவில்லை. அடுத்தப்படியாக, அந்த இணையதளத்திலேயே தரப்பட்டிருந்த தொலைபேசி எண் (044 28592255) மூலமாக, ஆணையாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.
நம்மிடம் பேசிய ஊழியர் ஒருவர், ‘’இவ்வாறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுபோன்ற ஒரு செய்தி சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சிக்காலத்தில் பரவியது. தற்போது ஆட்சி மாறிய பிறகும் அதனை சமூக வலைதளங்களில் பரப்பி, பொதுமக்களை சிலர் குழப்பி வருகின்றனர்,’’ என்று தெரிவித்தார்.
கூடுதல் ஆதாரத்திற்காக, சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான செய்திக் குறிப்பை கீழே இணைத்துள்ளோம். அதில் கூட சர்க்கரையே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பட்டி என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, பொதுமக்களை குழப்பும் வகையில் இந்த செய்தியை சிலர் தொடர்ச்சியாக, பரப்பி வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ரேசன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
