மாமன்னன் திரைப்படத்தில் அப்பாவுக்கு இருக்கை கொடுக்க போராடிய உதயநிதி, தி.மு.க சீனியர் நிர்வாகிகளுக்கு கூட இருக்கை கொடுக்காமல் அமர்ந்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இவுரு யாரென்று தெரியுதா...?? இவுருதாங்க அப்பாவுக்கு சேர் கொடுக்கலைனு போராடின ரீல் மாமன்னன்.. ஆனா ரியல் வேறு .... எம்புட்டு சீனியராக இருந்தாலும் உட்கார சேர் கொடுக்காத ரியல் 🖤❤️மன்னர் பரம்பரை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Gurnam Singh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கதாபாத்திரத்தை வைத்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்திகள், விஷம பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகளுக்கு அமர நாற்காலி கொடுக்காத உதயநிதி என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். 2022ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்ட படம் அது.

பொதுவாக மேயர், அமைச்சர், முதலமைச்சர் என பெரிய பொறுப்புகளுக்கு முக்கிய நிர்வாகி நியமிக்கப்படும் போது மற்றவர்கள் அழைத்துச் சென்று அந்த பதவிக்குரிய நாற்காலியில் அமர வைப்பது வழக்கமான ஒன்றுதான். அன்புடன் அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தவர்களுக்கு நாற்காலி கொடுக்கவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது.

இந்த புகைப்படம் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய, இந்த புகைப்படத்தின் பின்னணி பற்றித் தேடினோம். dtnext.in இணையதளத்தில் இந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார் என்று குறிப்பிட்டிருந்தனர். தி இந்து இதே போல் வேறு ஒரு படத்தை பகிர்ந்திருந்தது. அதில், உதயநிதி அமைச்சராக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார். அப்போது தி.மு.க மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களுமான துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive 1 I dtnext.in I Archive 2 I hindutamil.in I Archive 3

தமிழ் இந்து வெளியிட்டிருந்த செய்தியில், "தலைமைச் செயலகம் வந்த அவர், தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவரை மூத்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற படத்தை பகிர்ந்து, மூத்த அமைச்சர்களுக்கு இருக்கை கொடுக்காமல் உதயநிதி மட்டும் அமர்ந்திருந்தார் என்று விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்களுக்கு இருக்கை கொடுக்காமல் அவமதித்தார் என்று பரவும் படம் அவர் பதவியேற்பின் போது எடுக்கப்பட்டது என்பதும் அழைத்து வந்து அமர வைத்ததே மூத்த அமைச்சர்கள் தான் என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சீனியர் அமைச்சர்களுக்கு இருக்கை கொடுக்காத உதயநிதி என்று பரவும் படம்- பின்னணி என்ன?

Written By: Chendur Pandian

Result: False