வேளாண் சட்டங்களைப் போல நீட் தேர்வையும் ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முன்பு தீக்குளிப்பேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு ஆகியோர் படங்களை இணைத்து ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "வேளாண் சட்டங்களை போல நீட் தேர்வையும் ரத்து செய்யாவிட்டால் பாராளுமன்ற முன்பு தீக்குளிப்பேன் - வன்னியரசு, விசிக" என்று இருந்தது.

இந்த பதிவை Rajukannan Subburaj என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 நவம்பர் 21ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளவர் வன்னி அரசு. இவர் கூறியதாக அவ்வப்போது பல போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுவது வாடிக்கையாக உள்ளது. நீட் தேர்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. அதற்காக தீக்குளிப்பேன் என்று எல்லாம் கூறும் அளவுக்கு பேச வாய்ப்பில்லை. பலரும் இதை ஷேர் செய்யவே, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக ஏபிபி நாடு வெளியிடும் நியூஸ் கார்டின் ஃபாண்ட் போல இல்லை. பின்னணி டிசைன் இல்லை. "பாராளுமன்றம் முன்பு" என்பதற்கு பதில் "பாராளுமன்ற முன்பு" என்று வாக்கிய அமைப்பு பிழையாக இருந்தது. பிரதமர் மோடியின் புகைப்படம் தனியாக சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

இது குறித்து ஏபிபி நாடு ஆசிரியர் மனோஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர், இந்த நியுஸ் கார்டு போலியானது. கடந்த நவம்பர் 18ம் தேதி வன்னி அரசு தொடர்பாக ஒரு நியூஸ் கார்டை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அதை எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்து வெளியிட்டுள்ளனர்" என்றார்.

அசல் பதிவைக் காண: Facebook

மேலும், நவம்பர் 18, 2021 அன்று ஏபிபி நாடு வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டையும் அவர் நமக்கு அனுப்பினார். வன்னி அரசு மற்றும் சீமான் ஆகியோரது படங்களை இணைத்து அந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில், "திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிச்சட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்? - வன்னியரசு, விசிக" என்று இருந்தது.

சீமான் இருக்கும் இடத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்து, விஷமத்தனமான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முன்பு தீக்குளிப்பேன் என்று வன்னி அரசு கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முன்பு தீக்குளிப்பேன் என்று வன்னி அரசு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என வன்னி அரசு கூறியதாக பரவும் போலியான செய்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False