அயோத்தியின் தற்காலிக கழிவறை என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பக்தர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

திறந்தவெளி கழிப்பறை ஒன்றின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்த கோடிகளுக்காக பிரத்யேகமாக தயாராக இருக்கும் உலக தரம் வாய்ந்த கழிப்பறைகள். 56” ஞ்சுடா…. மோடிடா…….. அடுத்த முறையும் மோடி வந்தாலும் திருந்த மாட்டானுங்க இந்த வடக்கானுங்க….

அவனுங்கதான் படிக்காம பீடா போட்டு துப்பிட்டு போவானுங்க. இங்க நல்லா படிச்சுட்டு அவனுங்களுக்கு சப்போர்ட் பண்றானுங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு 2024 ஜனவரி 2ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் வருகிற 22ம் தேதி (ஜனவரி 22, 2024) அன்று ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். கோவிலின் இறுதிக் கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திறப்பு விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சொகுசு டெண்ட்கள் ஒரு தரப்பினருக்கும் மற்றவர்களுக்கு தகர ஷீட் போட்ட டெண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட பொது திறந்தவெளி கழிப்பறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் எந்த ஒரு ஊடகத்திலும் அப்படி ஒரு செய்தி, வீடியோ வந்ததாக தகவல் இல்லை. எனவே, இது பற்றித் தேடிப் பார்த்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் தேடினோம். இந்த கழிப்பறை அயோத்தில் அமைக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு இந்த நிகழ்வு தொடர்புடைய அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். தொடர்ந்து தேடியதில் நமக்கு சில யூடியூப் பதிவுகள் கிடைத்தன.

பெரிய கழிப்பறை என்று குறிப்பிட்டு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று ஒரு யூடியூப் பதிவு நமக்கு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய தியான மையம் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்காக அமைக்கப்பட்ட கழிப்பறை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தியான மையத்தை பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் திறந்து வைத்த வீடியோவும் நமக்கு கிடைத்தது.

அயோத்தியில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நவீன கழிப்பறை என்று பரவும் வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வாரணாசியில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தியான மையம் திறப்பு விழாவுக்காக அமைக்கப்பட்டது என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கழிபப்பறை என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பவர்களுக்காக அமைக்கப்பட்ட கழிப்பறை என்று பரவும் வீடியோ வாரணாசியில் வேறு ஒரு தியான மையம் திறப்பு விழாவுக்காக அமைக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயோத்தியின் தற்காலிக கழிவறை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: Missing Context