வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வரட்டியால் கொரோனாவை விரட்டுவோம். பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வரட்டியை எரிப்பதால் கொரோனா வைரஸ் அழிகிறது – உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்” என்று இருந்தது.

நிலைத் தகவலில், “டேய் ராகவா….. எல்லாரும் உன்ன கராத்தே மாஸ்டர்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா நீ பரோட்டா மாஸ்டர்னு எனக்கு மட்டும் தான் தெரியும். மக்கள் செருப்பு பிய்ய பிய்ய அடிக்கிறதுக்குள்ள… வாடா ஓடிடலாம்” என்று இருந்தது. இந்த பதிவை Troll BJP RSS என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஜனவரி 3ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போது, யோகா செய்வதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறியவர் யோகி ஆதித்யநாத். அப்போது அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டில் யோகி ஆதித்யநாத்துக்கே கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில் பசு வறட்டியை எரித்தால் கொரோனா வைரஸ் கிருமி அழிகிறது என்று யோகி கூறியதாக சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பகிர்ந்து வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டு உண்மையானதா என்று அறிய தந்தி டிவி ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். ஜனவரி 2, 2022 அன்று வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்த போது, யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி இருப்பது நமக்கு கிடைத்தது. ஆனால் அதில், “உ.பி.யில் கலவரங்கள் இல்லை. உத்தரப்பிரதேசத்தில் 2017ல் இருந்து கலவரங்கள் எதுவும் நடைபெறவில்லை. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்வதற்காகத் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் அசோகவர்த்தினிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவர் “இந்த நியூஸ் கார்டு போலியானது. தந்தி டிவி வெளியிட்டது இல்லை” என்று உறுதி செய்தார். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.

அடுத்து, யோகி ஆதித்யநாத் இப்படி ஏதும் கருத்து தெரிவித்தாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், யோகா செய்தால் கொரோனா வராது என்று யோகி ஆதித்யநாத் கூறிய பழைய செய்திகள்தான் கிடைத்தன. அதே நேரத்தில், பா.ஜ.க தலைவர்களின் வேடிக்கையான கருத்துக்கள் தொகுப்பாக சில செய்திகள் நமக்கு கிடைத்தன.

அதில், யோகி ஆதித்யநாத்தின் யோகா செய்தால் கொரோனா வராது என்ற தகவலுடன், அஸ்ஸாம் மாநில பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவர் கூறிய கருத்தை இணைத்துப் பதிவிட்டிருந்தனர். அவர்தான் பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வறட்டியை எரித்தால் கொரோனா வைரஸ் அழியும் என்று கூறியிருந்தார் எனக் குறிப்பிட்டிருந்தனர். 

அசல் பதிவைக் காண: asianetnews.com I Archive 1 I thehindu.com I Archive 2

இதன் மூலம் வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பகிரப்படும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பசு வறட்டியை எரித்தால் கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False