
மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 13 பேரை தி.மு.க அரசு விடுவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு சிறையில் இருந்த 13 பேர் பொதுமன்னிப்பில் விடுதலை” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில். “பட்டியல் பிரிவில் இருக்கும் மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாதுகாக்காது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு.
இதுதான் திமுகவின் சமூகநீதி திராவிட மாடல் ஆட்சி.
திமுக விற்க்கும் திருமாவளவனுக்கும் வாக்கு அளிக்கும் பறையர் சமுகம் உணரவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த முருகேசன் 1997ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் 2019ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அப்போது இருந்த அ.தி.மு.க அரசு விடுதலை செய்தது. அவர்கள் அப்போதே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இதில் ஒருவர் மட்டும் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கூட செய்தி வெளியாகி இருந்தது.
இந்த சூழலில், கொலைக் குற்றவாளிகள் 13 பேரை தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க அரசு விடுதலை செய்துள்ளதைப் போல பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அ.தி.மு.க-வினர் கூட இந்த விடுதலையை கண்டித்து தி.மு.க அரசை குற்றம்சாட்டிப் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. எனவே, இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்ய ஆதாரங்கள் தேடினோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள செய்தி படிக்கக் கூடிய நிலையில்தான் இருந்தது. அதில், ‘’இந்நிலையில் மதுரை சிறையிலிருந்த இவர்களில் 3 பேர் ஏற்கனவே நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு, பத்தாண்டுகள் கழித்த சிறைவாசிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் கைதாகி, சிறையிலிருந்த ராமர் உள்பட 13 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி சிறை டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் நேற்று இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்” என்று எழுதப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிந்தது.
எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்பட்டார்கள் என்றால் அது அ.தி.மு.க ஆட்சியில் என்பது தெளிவாகிறது. செய்தியிலேயே உண்மை விவரம் இருக்கும் போது, வதந்தி பரப்பியே ஆக வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க அரசு விடுதலை செய்தது என்று பகிர்கின்றார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள செய்தியைப் பார்க்கும் போது தினகரன் நாளிதழ் வெளியிட்டது போல் உள்ளது. கூகுளில், அந்த செய்தி தலைப்பை அப்படியே டைப் செய்து தேடினோம். அப்போது 2019ம் ஆண்டு தினகரன் வெளியிட்ட அந்த செய்தியும் நமக்குக் கிடைத்தது. இதன் மூலம் இந்த செய்தி 2019ம் ஆண்டு வெளியானது என்பது உறுதியாகிறது.
உண்மைப் பதிவைக் காண: dinakaran.com I Archive
மேலும் 2019ம் ஆண்டு வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தேடி எடுத்தோம். நம்முடைய தேடலில் மேலவளவு ஊராட்சித் தலைவர் கொலை மற்றும் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக பல ஊடகங்களில் வெளியான செய்திக் கட்டுரைகளும் நமக்குக் கிடைத்தன. மேலும், விடுதலையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான செய்திகளும் நமக்கு கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: vinavu.com I Archive
பிபிசி வெளியிட்டிருந்த செய்தியில், “அவர்களது விடுதலையை எதிர்த்து, முருகேசனின் மனைவி மணிமேகலை உட்பட இறந்தவர்களின் குடும்பத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். ஆனால், வழக்கை விசாரித்த உயர்நீதின்றம், “சிறையில் இருந்து வெளியே வந்துள்ள 13 பேரும், பரோலில் வெளியே வந்தபோது எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. அதேபோல, முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டபோதும், கிராமத்தில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை.
உண்மைப் பதிவைக் காண: bbc.com I Archive I aninews.in I Archive
எனவே, 13 பேரின் முன் விடுதலை குறித்து உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்து தரப்புச் சூழலையும் பரிசீலனை செய்த பிறகே தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்துள்ளது. ஆகையால், இதில் தலையிட விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசாணை 2019ல் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே, இதற்கும் தி.மு.க அரசுக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
அதிமுக ஆட்சியில் மேலவளவு கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது திமுக அரசு அவர்களை விடுவித்தது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் கொலைக் குற்றவாளிகள் 13 பேரை தி.மு.க அரசு விடுதலை செய்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
