5 பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டியது தி.மு.க எம்.பி மகன் என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

ஐந்து பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டி வந்த தி.மு.க எம்.பி-யை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிய போலீஸ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாலிமர் வெளியிட்ட செய்தி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், “மாமல்லபுரம் பகுதியில் சாலையில் சென்றவர்கள். இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளியபடியே சென்ற கார் செங்கல்பட்டு நகர பகுதியில் இளைஞர்கள் சிலர் பிடித்தனர். ஆனால், தனது மகன் மது அருந்தவில்லை. சாலையில் இருசக்கர வாகனத்தை முந்தியதால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இளைஞர்கள் காரின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பயந்து அவர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் என்றும் எம்.பி கிரிராஜன் கூறியதாக” தெரிவிக்கப்பட்டிருந்தது. எங்கும் சாலையில் ஐந்து பெண்களை ஏற்றி கொலை செய்த கார் என்று குறிப்பிடப்படவில்லை.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

ஆனால், நிலைத் தகவலில், “திமுக மாநிலங்களவை MP கிரிராஜன் மகன் மாமல்லபுரம் ரோட்டில் தனது காரில் மூன்று நண்பர்களுடன் அதீத போதையில் (2 ஆண் 2 பெண்) கட்டுக்கடங்காத வேகத்தில் காரை ஓட்டி வந்து ஐந்து பெண்களை இடித்துள்ளார் ஆனால் காவல் நிலையத்தில் அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நவம்பர் 27, 2024 அன்று மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஐந்து பெண்கள் மீது ஏறியது என்று செய்தி வெளியானது. இதில் ஐந்து பெண்களும் உயிரிழந்தனர். காரை ஓட்டிவந்தவரை பொது மக்கள் பிடித்து அடித்து உதைத்தனர் என்றும் செய்தி வெளியானது. இந்த நிலையில், காரை ஓட்டி வந்தது தி.மு.க எம்.பி கிரிராஜனின் மகன் என்றும், அவரை போலீசார் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர் என்றும் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Archive

பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த வீடியோவை ஆதாரமாகப் பதிவிட்டிருந்தனர். அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோவில் இடம் பெற்ற தகவலைக் கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது 2024 பிப்ரவரி 25ம் தேதி காலை 7.48க்கு அந்த செய்தியை பாலிமர் வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால், பெண்கள் உயிரிழந்த சம்பவம் நவம்பர் 27ம் தேதி நடந்தது. அதாவது கிரிராஜன் மகன் தொடர்பான செய்தி வௌியாகி ஒன்பது மாதங்கள் கழித்து ஐந்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive I dinamalar.com I Archive

சரி, மாமல்லபுரம் பண்டிதமேடு உயிரிழப்பு சம்பவத்தில் காரை ஓட்டி வந்தது எம்.பி மகன் என்று ஏதாவது ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். தீவிர தி.மு.க எதிர்ப்பு ஊடகமான தினமலரில் கூட அப்படி ஏதும் தகவல் இல்லை. தினமலர் வெளியிட்டிருந்த செய்தியில், “இந்தச் சம்பவம் தொடர்பாக சித்தலபாக்கத்தைச் சேர்ந்த ஜோஸ்வா(19) மற்றும் பெருங்குடியைச் சேர்ந்த தாஹித் அஹமது(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், ஜோஸ்வா காரை ஓட்டி வந்ததாகவும் தெரியவந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐந்து பெண்கள் மீது ஏறிய காரில் இருந்தவர்களை பொது மக்கள் பிடித்து தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை கைப்பற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சமாதானம் செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றதாக செய்திகள் கூறுகின்றன. 

ஐந்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த வீடியோவையும் தேடி எடுத்தோம். அதில் எங்கும் தி.மு.க எம்.பி மகன் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. உண்மை இப்படி இருக்கக் காரை ஓட்டியது தி.மு.க எம்.பி-யின் மகன் என்றும் குற்றவாளிகளை போலீஸ் விடுவித்தனர் என்றும் விஷமத்தனமாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது தெளிவாகிறது.

நம்முடைய ஆய்வில் கிரிராஜன் மகன் காரை பொது மக்கள் பிடித்து தாக்கிய சம்பவம் தொடர்பான செய்தி பாலிமர் டிவி-யில் பிப்ரவரி 25ம் தேதி வெளியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கார் மோதி ஐந்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் நவம்பர் 27ம் தேதி நடந்துள்ளது. இதன் அடிப்படையில் ஒன்பது மாத பழைய செய்தியை எடுத்து, புதிய சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி வதந்தி பரப்பியிருப்பது உறுதியாகிறது.

முடிவு:

2024 பிப்ரவரியில் திமுக எம்.பி மகன் ஆபத்தான முறையில் கார் ஓட்டிய சம்பவத்தை தற்போது மாமல்லபுரத்தில் ஐந்து பெண்கள் உயிரிழப்புடன் தொடர்புபடுத்தி தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:5 பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டியது தி.மு.க எம்.பி மகன் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False