
சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகச் செல்லும் பசுக்களை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது, அவற்றை யாரும் கடந்து செல்லக் கூடாது என்று டெல்லி முதலமைச்சர் உத்தரவிட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
டெல்லியில் சாலையில் பசுக்கள் கூட்டமாக நிற்பதை அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா பார்வையிடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜக ஆட்சி செய்யும் தலைநகர் டெல்லியில்.. பசுமாடுகள் சாலையில் செல்வதால் வாகனங்கள் யாரும் அதை தொந்தரவு செய்யக்கூடாது அதை கடந்து செல்லக்கூடாது என்று டெல்லி மாநில முதலமைச்சர் ஆணையிட்டார்..
பைத்தியக்காரனுங்க கையில ஆட்சிய கொடுத்தா இப்படித்தான் இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல் அமைச்சராக ரேகா குப்தா உள்ளார். இவர் சாலையில் செல்லும் பசுக்களை மக்கள் தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சாலையில் செல்லும் பசுக்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றால் சாலை முழுக்க பசுக்கள் மட்டும்தான் இருக்கும். ஒரு முதலமைச்சர் இப்படி உத்தரவிட்டிருப்பாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive
கூகுளில், ரேகா குப்தா, பசுக்கள், சாலை என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஊடகங்களில் வெளியான செய்திகள் கிடைத்தன. அதில், “டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஹைதர்பூர் மேம்பாலத்தில் செல்லும் போது கால்நடைகள் குறுக்கிட்டதால் திடீரென்று பிரேக் போட்டு வாகனம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வாகனத்திலிருந்து இறங்கிய ரேகா குப்தா, சாலையில் பசுக்கள் சுற்றித் திரிவதைத் தடுக்கவும் அவை தங்க தகுந்த இடத்தை ஏற்பாடு செய்யும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சாலையில் பசுக்கள் செல்வதைத் தடுக்கக் கூடாது, அவற்றைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று ஏதேனும் உத்தரவை டெல்லி முதலமைச்சர் பிறப்பித்தாரா என்று அறிய ஆய்வு செய்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ரேகா குப்தாவின் எக்ஸ் தள பக்கத்தை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் பதிவு ஒன்றை இந்தியில் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதை மொழி பெயர்த்துப் பார்த்தோம். அதில், “ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள ஹைதர்பூர் மேம்பாலத்தில் இன்று காணப்பட்ட பசுவிற்கு முறையான தங்குமிடத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. பசு பாதுகாப்பு மற்றும் சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதில் எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் சாலைகளில் செல்வோர் சாலையில் சுற்றித் திரியும் பசுக்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டெல்லி முதலமைச்சர் உத்தரவிட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
சாலையில் சுற்றித்திரியும் பசுக்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து சாலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை மாற்றி, சாலையில் செல்லும் பசுக்களை வாகனவோட்டிகள் தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டதாக தவறான தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:சாலையில் செல்லும் பசுக்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று டெல்லி முதல்வர் உத்தரவிட்டாரா?
Written By: Chendur PandianResult: False
