
நரேந்திர மோடி அரசு போக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே பேசிவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*பிஜேபி- ஐ ஆதரிக்கும் கூட்டங்களே நல்லா கேளுங்க!*சொல்வது உச்ச நீதிமன்ற நீதிபதி…* நீதித்துறை, தேர்தல் கமிசன்/ அமலாக்கபிரிவு/சிபிஐ போன்றவை மூலம்/
ஜெயிக்காத கட்சியை ஆளவைத்து ஆட்சி நடத்தும் அவலம்! ஜனநாயக படுகொலை…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உச்சநீதிமன்றத்தில் முன்னணி வழக்கறிஞர்களுள் ஒருவராக, அரசியல் – சமூக ஆர்வலராக இருப்பவர் பிரஷாந்த் பூஷன். அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் இல்லை. அவர் யார் என்று தெரியாமல் பதிவிட்டது போல் உள்ளது.
வீடியோவில் Brut. Footage: Oxford union என்று உள்ளது. அதனுடன் கூடுதலாக Prashant Bhushan என்று கூடுதலாக சேர்த்து கூகுளில் தேடினோம். அப்போது, Brut India என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில், எந்த இடத்திலும் பிரஷாந்த் பூஷனை உச்ச நீதிமன்ற நீதிபதி என்று குறிப்பிடவில்லை.
அடுத்ததாக Oxford union விவாதத்தில் பிரஷாந்த் பூஷன் பங்கேற்றுப் பேசிய வீடியோவை தேடி எடுத்தோம். 2019ம் ஆண்டு மே 21ம் தேதி பிரஷாந்த் பூஷன் பங்கேற்றுப் பேசிய வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் கூட பிரஷாந்த் பூஷனை இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி என்று குறிப்பிடவில்லை.
பிரஷாந்த் பூஷன் ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னைப் பற்றிய சிறுகுறிப்பு பகுதியில், இந்திய வழக்கறிஞர் என்றே குறிப்பிட்டிருந்தார். commoncause.in என்ற இணையதளத்தில் பிரஷாந்த் பூஷன் பற்றிய தகவல் வெளியாகி இருந்தது. அதில் அவரது கல்வி, பணி, செயல்பாடு பற்றி விரிவாக அளிக்கப்பட்டிருந்தது. அதிலும் அவர் வழக்கறிஞர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்து வரும் பிரஷாந்த் பூஷன் ஆக்ஸ்ஃபோர்டு யூனியன் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய வீடியோவை உச்ச நீதிமன்ற வழக்கறிஞரே மோடி அரசு பற்றி விமர்சித்துப் பேசிவிட்டார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஒரு விவாதத்தில் பங்கேற்று பேசிய வீடியோவை உச்சநீதிமன்ற நீதிபதி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“மோடி அரசை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி” என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: Misleading
