பெரியார் மையத்தில் இந்தி என்று பரவும் புகைப்படம் – உண்மை என்ன?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

பெரியார் மையத்தில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெரியார் மையத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*Controli மவனுகளா என்னடா இதெல்லாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் உள்ள பெரியார் மையத்தின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். டெல்லியில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலமான டெல்லியில் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியே கூடாது என்று திராவிடர் கழகம் கூறியது போலவும் ஆனால், அவர்கள் அலுவலகத்திலேயே இந்தி மொழியில் பெயர் பலகை வைத்தது போலவும் விமர்சித்து பலரும் இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி என்று இந்தியைக் கட்டாயமாகத் திணிக்காதீர்கள் என்று தான் திராவிட கட்சிகள் கூறி வருகின்றன. இந்தி மொழியே இருக்கக் கூடாது, இந்தி மொழியை யாருமே படிக்கக் கூடாது என்று யாரும் கூறியது இல்லை. ஆனால் விமர்சிப்பவர்கள் எல்லாம் ஏதோ திராவிடர் கழகம், தி.மு.க எல்லாம் இந்தி மொழியே இருக்கக் கூடாது என்று கூறியது போன்று விமர்சித்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: pmccdelhi.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் பற்றிய தகவலை தேடினோம். முதலில் இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, டெல்லியில் உள்ள பெரியார் மேனேஜ்மெண்ட் அன்ட் கம்ப்யூட்டர் காலேஜின் இணையதள பக்கம் நமக்குக் கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்திலிருந்த கட்டிடம் இருந்தது. இதன் மூலம் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றின் புகைப்படத்தை எடுத்துப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. 

உண்மைப் பதிவைக் காண: Google Map I Archive

இந்த கல்லூரி பற்றி தொடர்ந்து தேடினோம். இந்த கல்லூரி டெல்லியில் ஜசோலா (Jasola) என்ற இடத்தில் உள்ளது. இது தமிழர்கள் மட்டும் படிக்கும் கல்லூரி அல்ல. அனைவரும் இதில் சேர்ந்து படிக்கலாம். பெரியாரின் சுயமரியாதை நிறுவனத்தின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது என்று அந்த கல்லூரியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

டெல்லியில் செயல்படும் கல்லூரியில் அந்த ஊர் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தியில் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். அதனுடன் தமிழ் மொழி மீது உள்ள பற்று காரணமாக டெல்லியில் உள்ள கல்லூரியில் தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் கூட தெரியாமல் இந்த இடம் தமிழ்நாட்டில் இருப்பது போல் அல்லது இந்தி மொழிக்கு திராவிடர் கழகம் எதிரி போல சித்தரித்து தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லியில் உள்ள பெரியார் மையத்தின் பெயர் பலகையை இந்தியும் இடம் பெற்ற படத்தை எடுத்து தமிழ்நாட்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது போன்று தவறான அர்த்தம் வரும் வகையில் சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பெரியார் மையத்தில் இந்தி என்று பரவும் புகைப்படம் – உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading