RAPID FACT CHECK: தூத்துக்குடி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மாடுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆடு, மாடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வெள்ளத்தில் மாடுகள் அடித்துக் கொண்டு செல்லும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் ஆடு, மாடுகள்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல், முக்காணி, புன்னக்காயல் பகுதிகளில் மழை வெள்ளத்தின் காரணமாக தாமரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆடுகள், மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கோர காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு 2023 டிசம்பர் 26ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சி என்று இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். அதே போன்று தமிழ்நாட்டின் பேராணம்பட்டு  பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்றும் சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினர். இது தவறான தகவல் என்று அப்போது கட்டுரை வெளியிட்டிருந்தோம். 

தற்போது அந்த பழைய வீடியோவை தூத்துக்குடியில் எடுக்கப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே விரைவு உண்மை கண்டறியும் ஆய்வு செய்தோம்.

Archive

இந்த வீடியோ மெக்சிகோ நாட்டைச் சார்ந்தது. உண்மை வீடியோவை கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைத் தட்டச்சு செய்து தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு ஜூலை மாதம் மெக்சிகோ நாட்டு ஊடகங்கள் இந்த வீடியோவை தங்கள் ட்விட்டர்  (எக்ஸ் தளம்), யூடியூப் பக்கங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. 

அந்த பதிவுகளில் சமீபத்தில் ஏற்பட்ட ஹன்னா சூறாவளி காரணமாக ஏற்பட்ட கனமழையால் நயாரிட்டில் (Nayarit) உள்ள சகுவால்பான் (Zacualpan) என்ற இடத்தில் உள்ள  நதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் மாடுகள் இழுத்துச் செல்லப்பட்டன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி எங்கு உள்ளது என்று கூகுளில் தேடினோம். அப்போது இது மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு பகுதி என்பது தெரிந்தது. இந்திய ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகி இருந்தது.

இந்த ஆதாரங்கள் எல்லாம், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறான தகவலைக் கொண்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தூத்துக்குடி ஏரல் பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள் என்று பரவும் வீடியோ மெக்சிகோ நாட்டைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:RAPID FACT CHECK: தூத்துக்குடி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மாடுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False