
75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் அருவியில் வண்ணப் பொடியை கொட்டி மூவர்ண தேசிய கொடியாக்கிக் கொண்டாடிய மக்கள் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அருவியில் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ண பொடியை கொட்டி தேசிய கொடியின் மூவர்ணம் போன்று அருவி நீர் கொட்டுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில், மக்கள் அருவியில் வண்ண பொடியை கொட்டி தேசிய கொடிபோல மாற்றி கொண்டாடினர் என்ற வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அருவியை மூவர்ண கொடியாக்கி கொண்டாடும் மக்கள்! | 75TH INDEPENDENCE DAY” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Galatta Media என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியா முழுவதும் 75வது சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி மக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றினர். வாகனங்களில் கொடியை கட்டி வைத்து மகிழ்ந்தனர். அருவிகளிலும் கூட வண்ண பொடியை கொட்டி மகிழ்ந்தனர் என்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோ உண்மைதான். 75வது சுதந்திர தினத்தின் போது நடந்ததா என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2022ல் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. 2020ம் ஆண்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது.
2020 ஆகஸ்ட் 16ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், ராஜஸ்தானில் ஜோத்பூரில் மக்கள் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அருவியின் உச்சியில் இளஞ்சிவப்பு, பச்சை நிறத்தைக் கலந்தனர். அருவியின் நீர் ஏற்கனவே வெள்ளையாகக் கொட்டியதால் தேசியக் கொடியின் மூவர்ணம் போன்று அருவி காட்சி அளித்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: bhaskar.com I Archive
இதன் அடிப்படையில் ஜோத்பூர், மூவர்ணம், தேசியக் கொடி, அருவி என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது 2020ல் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ 2022ம் ஆண்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.
முடிவு:
75வது சுதந்திர தினத்தையொட்டி அருவியில் வண்ணப் பொடியை கொட்டி தேசிய கொடியை உருவாக்கி மகிழ்ந்த மக்கள் என்று பரவும் வீடியோ 2020ல் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அருவியில் மூவர்ணக் கொடி; கொண்டாடும் மக்கள்- இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
