கஞ்சா போதையில் அப்பாவின் காலை வெட்டிய மகன் என்று பரவும் செய்தி தற்போது நடந்ததா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தி.மு.க ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையின் காலை வெட்டிய மகன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

போதையில் ஒருவர் கையில் பெரிய அரிவாளுடன் தள்ளாடி, தரையில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கஞ்சா போதை தகப்பன் காலை வெட்டிய மகன் மத்தபடி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கஞ்சா போதையில் தந்தையின் காலை வெட்டிய மகன் என்று குறிப்பிட்டு அதனுடன் “எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று பதிவிட்டுள்ளனர். 2023ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது “எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.  இதன் மூலம் தி.மு.க ஆட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று ஆய்வு செய்து பார்த்தோம்.

கூகுளில், “கஞ்சா போதை தகப்பன் காலை வெட்டிய மகன்” என்று டைப் செய்து தேடினோம். அப்போது அதிமுக ஆதரவு தொலைக்காட்சியான நியூஸ்ஜெ-வில் 2020ம் ஆண்டு இந்த செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ செய்தியை காண முடிந்தது. 2020ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தான் ஆட்சியிலிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் தி.மு.க ஆட்சியில் நடந்தது இல்லை என்பது உறுதியானது.

தொடர்ந்து தேடிய போது விகடன், கலைஞர் செய்திகள் உள்ளிட்ட பல ஊடகங்களிலும் 2020ம் ஆண்டு இந்த செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. தி.மு.க ஆட்சியில் கஞ்சா சம்பவமே இல்லை என்று கூறவில்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்தது இல்லை என்பதை மட்டும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம்.

முடிவு:

2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்த போது குன்னூரில் நடந்த சம்பவம் ஒன்றின் வீடியோவை இப்போது திமுக ஆட்சியில் நடந்ததாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கஞ்சா போதையில் அப்பாவின் காலை வெட்டிய மகன் என்று பரவும் செய்தி தற்போது நடந்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply