
மன்மோகன் சிங் சிகிச்சை பெற்ற போது கடைசியாக எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை வைத்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மன்மோகன் சிங்கின் கடைசி புகைப்படம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இம்மண்ணை விட்டு பிரிந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் வைரல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவு காரணமாக டிசம்பர் 26, 2024 அன்று உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறப்பதற்கு முன்பு கடைசியாக எடுத்த புகைப்படம் என்று ஒரு படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த புகைப்படம் முன்பு வெளியாகி இருந்த நினைவு இருந்ததால் அது பற்றி ஆய்வு செய்தோம்.
மன்மோகன் சிங் சிகிச்சை பெற்ற பகுதியை மட்டும் தனியாக எடுத்து, கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். கடந்த நான்கு நாட்களாக அதிக அளவில் மக்கள் இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது, 2021ம் ஆண்டு இந்த புகைப்படத்தைச் சிலர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
2021 அக்டோபர் 14ம் தேதி வெளியான அந்த பதிவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2021ல் இந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருப்பதன் மூலம் 2024 டிசம்பரில் மன்மோகன் சிங் மரணம் அடைவதற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்று பரவும் தகவல் தவறானது என்பது தெளிவானது.
உண்மைப் பதிவைக் காண: zeenews I Archive I ahmedabadmirror I Archive
செய்தி ஊடகங்களில் ஏதும் புகைப்படம் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது 2021ம் ஆண்டு zeenews-ல் இந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில், அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்வின் வேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வேறு சில ஊடகங்கள் வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் மன்மோகன் சிங்கின் கடைசி புகைப்படம் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
முன்னாள் பிரதமர் மன்மோன் சிங்கின் உயிர் பிரிவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் என்று பரவும் படம் 2021ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம்தான் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மன்மோகன் சிங்கின் கடைசி படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
