
ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பயந்து இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அமைதியாக பாடல் பாடி வழிபாடு செய்வது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய ஏவுகணைகளுக்கு பயந்து இஸ்ரேலிய அதிகாரிகளும் வீரர்களும் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்று வீடியோ ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பார்க்கும் போது ஏதோ பாடல் ஒலிக்கிறது. அனைவரும் சோகமாக உள்ளனர். உண்மையில் அவர்கள் பதுங்கு குழியில் பதுங்கியிருந்தால் அதை வீடியோவாக எடுத்து வெளியிட வாய்ப்பில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. எனவே, இந்த வீடியோவுக்கும் தற்போது இஸ்ரேல் – ஈரான் மோதலுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவானது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
2024 மே 13ம் தேதி வெளியான அந்த பதிவில் இந்த யோம் ஹாசிகரோன் (Yom HaZikaron)-ல் வீரர்கள் ஒன்று சேர்த்து உயிரிழந்தவர்களுக்காக When the heart cries என்ற பாடலை பாடினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. யோம் ஹாசிகரோன் என்றால் என்ன என்று பார்த்த போது இஸ்ரேலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கான நினைவு தினம் என்று தெரியவந்தது. அந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறி வருவதும் தெரிந்தது. 2024ம் ஆண்டில் மே 12 மாலை முதல் அனுசரிக்கப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து தேடிய போது Memorial Day என்று குறிப்பிட்டு சிலர் 2024 மே மாதம் இந்த வீடியோவை யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் தளம் என பல சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ 2025 ஜூன் மாதம் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பயந்து இஸ்ரேலிய ராணுவத்தினர் பதுங்கு குழிகளில் பதுங்கினர் என்று பரவும் வீடியோ பதிவு தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
2024ம் ஆண்டு இஸ்ரேலில் இறந்த ராணுவ வீரர்கள் நினைவு தினத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை 2025ல் ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கு பயந்து பதுங்கு குழிகளில் பதுங்கிய இஸ்ரேல் ராணுவத்தினர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஈரான் தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனரா?
Fact Check By: Chendur PandianResult: False
