
திருவண்ணாமலை கோவிலில் உள்ள பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் அகற்றப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கோவில் ஒன்றில் என்ன மொழி என்றே தெரியாத வகையில் ஏதோ ஒரு மொழியில் பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலையில் திருவண்ணாமலை.! ஆரியமும் திராவிடமும் கூட்டுக்களவாணிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலிலிருந்த பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழை அகற்றிவிட்டு தெலுங்கு மொழியில் அறிவிப்புப் பலகைகளை வைத்துள்ளதாகப் பலரும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அந்த புகைப்படங்களை பார்க்கும் போது உண்மையானது போலத் தெரியவில்லை. ஏஐ (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் போல உள்ளது. என்ன மொழி என்றே தெரியாத வகையில் பார்க்க கன்னடம், சிங்கள மொழி எழுத்துக்கள் போல இருக்கிறது. ஆனால் நிச்சயம் இது எந்த மொழியின் எழுத்தும் இல்லை.
ஏஐ-ல் எழுத்துக்கள் சரியாக இடம் பெறாது. ஆங்கில வார்த்தைகளில் கூட தவறுகளைக் காண முடியும். அப்படி இருக்க தெலுங்கு மொழியில் ஏஐ டூலை பயன்படுத்தியுள்ளனர். அது வேறு தனக்குத் தெரிந்த மொழிகளை எல்லாம் சேர்த்து புதிய மொழியில் பெயர்ப்பலகையைத் தயார் செய்து கொடுத்துள்ளது. இந்த புகைப்படம் ஏஐ-ல் உருவாக்கப்பட்டதா என்று ஏஐ புகைப்படங்களை கண்டறிய உதவும் இணையதளத்தில் பதிவேற்றித் தேடினோம். அதுவும் இது ஏஐ புகைப்படம் என்பதை உறுதி செய்தது.
இந்த புகைப்படத்தை திருவண்ணாமலையில் உள்ள முன்னணி ஊடகம் ஒன்றின் செய்தியாளருக்கு அனுப்பி, திருவண்ணாமலை கோவிலில் வேறு மொழியில் அல்லது தெலுங்கு மொழியில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டோம். அவரும் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஃபேக்ட் செக் தரப்பில் ஏதேனும் பதிவு வெளியிடப்பட்டுள்ளதா என்று பார்த்தோம். அதில், “இது முற்றிலும் பொய்யான தகவல். இந்தப் புகைப்படத்தில் இருப்பது திருவண்ணாமலையில் உள்ள கோயில் அல்ல. அதில் உள்ள பேனரில் இருப்பது மொழியே அல்ல. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை திருவண்ணாமலையில் உள்ள கோயில் என்று குறிப்பிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். இதை திருவண்ணாமலை கோயில் உதவி ஆணையரும் மறுத்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திருவண்ணாமலை கோவிலில் தமிழுக்கு பதில் தெலுங்கு மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது என்று பரவும் புகைப்படங்கள் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:திருவண்ணாமலை கோவில் பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் அகற்றப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
