கும்பமேளா தீ விபத்து; சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

கும்பமேளா தீ விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாமியார் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கைகளில் கயிற்றைக் கட்டி, துப்பாக்கி முனையில் ஆற்றிலிருந்து அழைத்து வருவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சாமியார் “அயூப் கான்”. லட்சக்கணக்கான சாதுக்களை கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் ஆனால் உபி போலீஸ் கைது செய்துள்ளது.

மகாகும்பில் தீவிபமும் சந்தேகத்தின் கீழ்… ஜெய் சநாதன 💪💪 உடைக்கப்படாத இந்து நாடு 🌷அவன் தப்பு செய்யட்டும் செய்யாமல் போகட்டும.கும்பமேளாவில் #ஐயுக்கானுக்கு என்ன வேலை இருக்கிறது.?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஜனவரி 20ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது (ஜனவரி 25 அன்றும் ஏற்பட்டுள்ளது). இதில் 20க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்தன. உணவு சமைக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக தீ பரவியது என்று கூறப்பட்டது. ஆனால், தீ விபத்து தொடர்பாக இந்து சாது போன்று வேடமிட்டு வந்த அயூப் கான் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Archive

புகைப்படத்தைப் பார்க்கும் போதே அது உண்மையானது இல்லை, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரிகிறது. இந்த தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம். கூகுளில் கும்பமேளா, தீ விபத்து, அயூப் கான் என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது 2025 ஜனவரி 14ம் தேதி வெளியான செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், மகா கும்பமேளாவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சாமியார் ஒருவரின் அறைக்கு வந்து, அவரை சந்திக்க விரும்புவதாக கூறிய சந்தேகத்திற்கிடமான நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் தன்னுடைய பெயர் ஆயுஷ் என்று கூறினார். ஆனால், சரியான அடையாள அட்டை எதுவும் இல்லாத காரணத்தால் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

உண்மைப் பதிவைக் காண: etvbharat.com I Archive

போலீஸ் விசாரணையில், “அவரது பெயர் அயூப் அலி என்று தெரியவந்தது. அவர் கும்பமேளாவைப் பார்க்க வந்ததாக கூறினார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து மற்றொரு செய்தியில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு எந்த ஒரு குற்றப்பின்னணியும் இல்லை, அவர் மீது வழக்குகள் எதுவும் இல்லை. மேலும் யாருக்கும் அவர் தீங்கிழைக்கவில்லை என்பதால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கும்பமேளா முதல் தீ விபத்து ஜனவரி 20ம் தேதி நடந்தது. ஆனால், அயூப் அலி ஜனவரி 14ம் தேதியே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டார். அதாவது தீ விபத்து ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்பாகவே இந்த சம்பவம் நடந்துவிட்டது. இதன் மூலம் தீ விபத்து சந்தேகம் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம். ஏஐ புகைப்படமா என்பதை உறுதி செய்யும் இணையதளத்தில் இந்த புகைப்படத்தைப் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது ஏஐ புகைப்படம் என்று அந்த இணையதளங்களும் உறுதி செய்தன. இதன் அடிப்படையில் கும்ப மேள தீ விபத்து காரணமாக கைது செய்யப்பட்ட அயூப் அலி என்று பரவும் புகைப்படம் மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கும்ப மேளாவிற்கு சாமியார் போல மாறுவேடமிட்டு வந்த அயூப் கான் என்ற நபரை போலீசார் கைது செய்தனர் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கும்பமேளா தீ விபத்து; சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False