
நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து ஒரே குடும்பமாக உள்ளனர் என்று விஷமத்தனத்துடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வேளாங்கண்ணி மாதா சுரூபத்தின் முன்பு நடிகர் விஜய் மற்றும் திரிஷா முழந்தாள் படியிட்டபடி இருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Antony பொதுவா மாதாகூட குடும்பத்தோடதானே போட்டோ எடுப்போம்?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா வேளாங்கண்ணி மாதா சுரூபத்திற்கு முன்பு முழந்தாள் படியிட்டபடி இருக்கும் படம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் அவ்வப்போது பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தை ஏஐ மூலம் மாற்றி சங்கீதாவுக்குப் பதில் நடிகை திரிஷா படத்தை வைத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் – நடிகைகள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிடுவது ஒன்றும் தவறானது இல்லை. ஆனால், பொதுவாக இந்த மாதிரி வேளாங்கண்ணி மாதா சுரூபத்தின் முன்பு குடும்பமாகத்தான் புகைப்படம் எடுப்பார்கள் என்று ஒரு விஷமத்தனமான கருத்தைச் சேர்த்திருப்பதன் மூலம், நடிகர் விஜய் – நடிகை திரிஷா ஒரே குடும்பமாக இருக்கின்றனர் என்பது போன்ற கருத்தைப் பதிவிட்டுள்ளனர். எனவே, இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
படத்தை பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. வேளாங்கண்ணி மாதா சுரூபத்தின் முகம் தெளிவாக இல்லை. செயற்கை நுண்ணறிவு மூலம் படத்தை மாற்றும் போது முகம் சிதைவுற்றுள்ளதைக் காண முடிகிறது. நடிகர் விஜய் – சங்கீதா உண்மை புகைப்படம் எப்போது வெளியானது என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக அது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிகிறது. 2014ம் ஆண்டில் இந்த புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.
விஜய் – திரிஷா புகைப்படத்தை ஏஐ புகைப்படங்களைக் கண்டறியும் தளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அவை எல்லாவற்றிலும் இது செயற்கையானது, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்றே நமக்கு முடிவுகள் கிடைத்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நடிகர் விஜய் – திரிஷா மாதா சிலை முன்பு முழந்தாள் படியிட்டிருக்கும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வேளாங்கண்ணி மாதா சுரூபம் முன்பாக குடும்ப புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் – திரிஷா என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“குடும்ப படம்” என்று விஜய் – திரிஷா பற்றி பகிரப்படும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
