
எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்து ஜாதிக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, சாதி சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை. இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை. உடனே அனைத்து சாதி சான்றிதழ்களும் ரத்து செய்ய வேண்டும். சலுகைகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இட ஒதுக்கீடு அவசியமில்லை, சாதிச் சான்றுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சன் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்தது போன்று உள்ளது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
பிரேமலதா விஜயகாந்த் இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். அப்போது சாதிவாரியான கணக்கெடுப்பு தொடர்பாக பேட்டி அளித்திருப்பது தெரியவந்தது. அதில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்று கூறினார். சாதி சான்றிதழ், இட ஒதுக்கீடு தேவையில்லை என்றெல்லாம் அவர் கூறவில்லை. எனவே, இந்த தகவல் பாதி உண்மை, பாதி தவறானது என்பது தெரியவந்தது.
அடுத்ததாக சன் நியூஸ் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். செப்டம்பர் 6, 2025 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி இருந்தது. ஆனால் அதில்”அவசியமில்லை, இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை. செங்கோட்டையனின் பேச்சு அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்பதால் கருத்து கூற முடியாது பிரேமலதா” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்திருப்பது தெரிகிறது.

இது தொடர்பாக சன் டிவி டிஜிட்டல் பொறுப்பாளரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உண்மையுடன் தவறான தகவலை சேர்த்து வதந்தி பரப்பியிருப்பது உறுதியாகிறது.
முடிவு:
இட ஒதுக்கீடு தேவையில்லை, சாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா பேட்டி என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:அனைத்து சாதி சான்றிதழ்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
