பெண்ணின் இடுப்பை பிடித்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் போலி புகைப்படம்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவரு தான் உத்திரபிரதேச பாட்ஷா இவர் முற்றும் தொறந்த முனிவரு. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு காயடி குமாரு தன்னைவிட 20 வயது குறைவான குமாரின் காலில் தான் தமிழக சூப்பர் ஸ்டார் ரசினி விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்….. இந்த நாய் இனியும் தமிழ்நாட்டுக்கு தேவையா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை Bharathi Raja என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தார். இது தொடர்பாகக் கேட்ட போது, சன்னியாசிகள் காலில் விழுந்து ஆசி பெறுவது தன்னுடைய வழக்கம் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதை விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. யோகி ஆதித்யநாத் பெண்மணி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி என்று ஒரு பழைய பதிவை இப்போது வைரல் ஆக்கி வருகின்றனர். இது தவறான தகவல் என்று ஏற்கனவே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

பெண்மணி ஒருவரின் இடுப்பில் யோகி கை வைத்திருப்பது போன்ற படம் பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது தலையை மட்டும் போட்டோ எடிட் முறையில் தனியாக வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, உண்மையான படத்தைத் தேடினோம்.

Archive

கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் இந்த படத்தை பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2021ல் வெளியான பல சமூக ஊடக பதிவுகள் நமக்குக் கிடைத்தன. இடுப்பு கிள்ளி பாஜக என்று இந்த படத்தை 2021ல் பலரும் பகர்ந்திருந்ததை  காண முடிந்தது. அதில் யோகி ஆதித்யநாத் இல்லை, வேறு ஒரு நபர் இருந்தார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அந்த படத்தை எடிட் செய்து தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவானது.

இந்த புகைப்படத்தில் உள்ளது யார் என்று தேடிப் பார்த்தோம். ஆனால் நமக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை. பாஜக-வினர் வருகின்றனர் பெண்களே உஷார் என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பலரும் பகிர்ந்திருந்ததைக் காண முடிந்தது. அந்த நபர் யார், இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது போன்ற எந்த தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை.

நம்முடைய ஆய்வில் யோகி ஆதித்யநாத் பெண் ஒருவரின் இடுப்பை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் போட்டோ எடிட் செய்யப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெண்ணின் இடுப்பை பிடித்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் புகைப்படம் உண்மையில்லை, எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெண்ணின் இடுப்பை பிடித்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் போலி புகைப்படம்!

Written By: Chendur Pandian 

Result: False