ராகுல் காந்தி மது அருந்தியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

ராகுல் காந்தி மது அருந்துவது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராகுல் காந்தி உணவருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு முன்பாக ஒரு கிளாசில் மது உள்ளது. ஒரிஜினல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன், “சரக்கு அடிக்கும் போது நிறைய ஸைடிஸ் எடுத்துக்கனும் இல்லாட்டி குடல் பாதிக்கு காங்கிஸ் முதியவர்களுக்கு பப்பு அறிவுரை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தை BJP- Tamilnadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Alagurajan KL என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டதிலிருந்து அவரைப் பற்றி விதவிதமாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தியா முழுக்க நன்கு அறிமுகமான ஒரு தலைவர், தனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் கூட பொது வெளியில் மது அருந்த மாட்டார். அதுவும் கழுகுகள் போல அவரையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டு அவர் அவர் தவறு செய்தால் அதை பெரிதாக காட்டலாம் என்று பலரும் இருக்கும் சூழலில் இப்படி பொது வெளியில் மது அருந்தியிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் இந்த புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, ParanjoyGuhaThakurta என்ற ட்விட்டர் ஐடி கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் இந்த புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “எதிர்பாராத நிகழ்வு: இன்று காலை பஞ்சாப் சென்றேன். பாரத ஒற்றுமை பயணத்தைக் கடந்தேன். கர்னலில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள தாபாவில் ராகுல் காந்தி உணவருந்திக் கொண்டிருந்த போது சில சிரமங்களைக் கடந்து அவரை சந்தித்தேன். அவருடன் அரசியல், பொருளாதாரம், இந்தியப் பணக்காரர்கள் பற்றி விவாதித்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் பகிர்ந்திருந்த புகைப்படத்தில் ராகுல் காந்தி தேநீர் அருந்துவது தெரிந்தது. இந்த புகைப்படத்தை எடிட் செய்து மது பாட்டில் மற்றும் மாமிசத்தைச் சேர்த்து தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது. வேறு ஏதும் ஆதாரம், வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். ஆனால், வேறு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. 

அதே நேரத்தில் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் இது தொடர்பாகக் கட்டுரை வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், ராகுல் காந்தி மது அருந்தியதாக பகிரப்படும் படத்தில் உள்ள மது நிரம்பிய கிளாஸ் கூட இன்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

ராகுல் காந்தி தேநீர் அருந்திய படத்தை எடிட் செய்து விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பது உறுதியாகியுள்ளது. இதன் அடிப்படையில் ராகுல் காந்தி மது அருந்தினார் என்று பரவும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராகுல் காந்தி மது அருந்தியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்பதை உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராகுல் காந்தி மது அருந்தியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False