“வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வோம்” என்று வெளிப்படையாக அமித்ஷா அறிவித்தாரா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாலும் அது காங்கிரசுக்கு போகாது என்று வெளிப்படையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படும் என்ற அர்த்தத்தில் அமித்ஷா பேசியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இரு வேறு நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்து ஒரே பதிவாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முதல் நியூஸ் கார்டில், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜக நிர்வாகிகள்” என்று இருந்தது. அடுத்த நியூஸ் கார்டில், “நீங்க காங்கிரசுக்கு ஓட்டு போட்டாலும் அது கங்கிரசுக்கு போகாது பூகம்பத்தை கிளப்பிய அமித் ஷா” என்று இருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வாக்குப் பதிவு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜக நிர்வாகிகள் இருப்பது தொடர்பான செய்தியையும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு செல்லாது என்று அமித்ஷா கூறிய செய்தியையும் ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துள்ளோம் என்று அமித்ஷா வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

தந்தி டிவி வெளியிட்ட செய்தியை தேடி எடுத்தோம். அதில், தெலங்கானாவில் பிஆர்எஸ் (முன்பு டிஆர்எஸ்) கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் வாக்கு பிஆர்எஸ் கட்சிக்கு செல்லும் என்று அமித்ஷா கூறினார் என்று குறிப்பிட்டிருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பிஆர்எஸ் கட்சிக்கு சாதகமாக மாறிவிடும் என்று அமித்ஷா கூறியதை மக்களை கவர்வதற்காக வித்தியாசமான தலைப்பு வைக்க வேண்டும் என்று தந்தி டிவி வைத்துள்ளது தெளிவாகிறது. இதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யத் திட்டம் என்று அமித்ஷா கூறவில்லை என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜக நிர்வாகிகள் என்ற செய்தியை தேடி எடுத்தோம். அந்த செய்தியை கலைஞர் செய்திகள் டிவி வெளியிட்டிருந்தது. அவர்கள் வெளியிட்டிருந்த யூடியூப் வீடியோவின் முகப்பு பக்கமாக அந்த நியூஸ் கார்டு இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 7 இயக்குநர்களில் பாஜக நிர்வாகிகள் 4 பேர் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். 

Archive

அஜய் போஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றது தொடர்பான எக்ஸ் தள பதிவையும் தேடி எடுத்தோம். இதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து காங்கிரஸ் கட்சிக்கு போடும் ஓட்டு அக்கட்சிக்குச் செல்லாமல் செய்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் அமித்ஷா பேசியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தெலுங்கானாவில் பிஆர்எஸ்-க்கும் காங்கிரசுக்கும் ரகசிய கூட்டணி உள்ளதால் வாக்குகள் பிஆர்எஸ்-க்கு செல்லும் என்ற அர்த்தத்தில் அமித்ஷா பேசியதை அவர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வோம் என்று கூறியது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வோம்” என்று வெளிப்படையாக அமித்ஷா அறிவித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading