திரிபுராவில் ஏராளமான வீடுகள் பற்றி எரிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நூற்றுக் கணக்கான வீடுகள் தீப்பற்றி எரியும் கொடூரமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "திரிபுரா 😭😭😭 அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்.." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Good Videos என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 அக்டோபர் 30ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஏழைகள் வசிக்கும் நூற்றுக் கணக்கான வீடுகள் பற்றி எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் மக்கள் கதறும் சத்தம் கேட்கிறது. ஆனால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாகக் கேட்க முடியவில்லை. மேலும், வீடியோவில் இந்த சம்பவம் திரிபுராவில் நடந்தது என்று எந்த ஒரு தகவலும் பதிவாகவில்லை.

நிலைத் தகவலில் திரிபுரா என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் இந்த சம்பவம் திரிபுராவில் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளது தெளிவாகிறது. தற்போது திரிபுராவில் மத மோதல்கள் நடந்து வரும் சூழலில் இஸ்லாமியர்களின் வீடுகளை இந்துக்கள் எரித்தது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வீடியோ திரிபுராவில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், வங்க தேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் குடியிருப்பில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து என்று குறிப்பிட்டிருந்தனர்.

வங்கதேசம், ரோஹிங்கியா, குடியிருப்பு தீ விபத்து என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது, வங்கதேசத்தில் காக்ஸ் பஜார் என்ற பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது என்றும் ஏழு பேர் உயிரிழந்தனர், ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்று குறிப்பிட்டு செய்திகள் பல கிடைத்தன.

இதன் மூலம், 2021 மார்ச் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் குடியிருப்பு தீ விபத்து வீடியோவை திரிபுராவில் நடந்தது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திரிபுராவில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு எரிக்கப்பட்டதாக பகிரப்படும் வீடியோ 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வைரலாக பரவும் வீடுகள் தீப்பற்றி எரியும் வீடியோ; திரிபுராவில் எடுக்கப்பட்டது இல்லை!

Fact Check By: Chendur Pandian

Result: False