
‘’இரண்டு சிறுமிகளை முரட்டுத்தனமாக தாக்கும் தமிழர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ *இவன் யார் எந்த ஊருன்னு தெரியல தமிழ்நாட்டை சேர்ந்த இவன கைது செய்து முட்டிக்கு முட்டடி தட்ர வரைக்கும் ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் ஃபிரண்ட்ஸ்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் ஒருவர், தெலுங்கில் பேசியபடி, 2 சிறுமிகளை அடித்து, துன்புறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதையும் கண்டோம்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுதொடர்பாக, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஆந்திராவை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் X வலைதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவின் லிங்க் கிடைத்தது. அதில், நாம் ஆய்வு செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்த அவர், மேற்கு கோதாவரி மாவட்டத்தின் Tadepalligudem சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட Pentapadu என்ற கிராமத்தில் மனைவி வெளிநாட்டில் வேலை செய்யும் சூழலில், கணவன் இவ்வாறு தனது 2 மகள்களை அடித்து சித்ரவதை செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேற்கண்ட X வலைதள பதிவின் பேரில், உடனடியாக, மேற்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உடனடியாக விரைந்து சென்று, அந்த சிறுமிகளை மீட்டனர். மேலும், குறிப்பிட்ட சிறுமிகளின் தந்தை மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளதாக, போலீஸ் பதில் கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக அப்போதே ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
இது மட்டுமின்றி, குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார் என்றும், சில மாதங்கள் கழித்து, 2023ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த அவர், தனது மனைவியை கொன்றுவிட்டார் என்றும் செய்தி ஆதாரம் கிடைத்தது.
அதனையும் இங்கே இணைத்துள்ளோம்.
எனவே, கடந்த 2022ம் ஆண்டு ஆந்திராவில் நிகழ்ந்த குடும்ப வன்முறை தொடர்பான வீடியோ ஒன்றை எடுத்து, தமிழ்நாட்டில் நடைபெற்றது போல குறிப்பிட்டு, இன்றளவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:இரண்டு சிறுமிகளை முரட்டுத்தனமாக தாக்கும் தமிழர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
