அ.தி.மு.க நிர்வாகிகளை சில்லறைகள் என்றும், அவர்களைப் பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "சில்லறைகள் பற்றி கவலையில்லை. எடப்பாடியாருக்கும் எனக்கும் கட்சி மற்றும் கொள்கைகள் தாண்டிய ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. அவர் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு. அதிமுகவில் இருக்கும் மற்ற சில்லறைகள் பற்றி கவலை எனக்கில்லை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "கேட்....டுச்....சா #ஜெயக்குமா....ரே #சண்முக....மே.. .நீங்க ரெண்டு பேரும் சில்லரைகளாம்.... வீட்டுக்கு போகும்போது.... கயிறை மறந்துராதிங்க!!!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை வானவில் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 13ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அதிமுக-வின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய சில கருத்துக்கள் அ.தி.மு.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தன்னை விமர்சித்த அ.தி.மு.க தலைவர்களை சில்லறைகள் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் உள்ளிட்டவை வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தெளிவாகத் தெரிந்தது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

Archive

முதலில் இப்படி ஏதும் கருத்துக்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கை நமக்குக் கிடைத்தது. அதில், எந்த இடத்திலும் அ.தி.மு.க நிர்வாகிகளை சில்லறைகள் என்று அண்ணாமலை கூறவில்லை. வேறு எங்காவது இப்படி அண்ணாமலை கூறினாரா என்று அறிய தமிழ்நாடு பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் அது போலியானது என்று உறுதி செய்தார்.

அடுத்ததாக இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. அதே நேரத்தில் அண்ணாமலை அறிக்கையை வைத்து நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அதிமுக நிர்வாகிகளை சில்லறைகள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அதிமுக நிர்வாகிகளை சில்லறைகள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அதிமுக நிர்வாகிகளை ‘சில்லறைகள்’ என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False