சமையல் எரிவாயு விலை இனிமேல் உயர்த்தப்படாது என்று அண்ணாமலை அறிவித்தாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கேஸ் சிலிண்டர் விலை இனி உயர்த்தப்படாது என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேஸ் விலை ஏற்றம் இதுவே கடைசி. இதுவே கடைசி இதற்கு மேல் கேஸ் விலை உயர்த்தப்படாது. மீறி உயர்த்தினால் எங்களை செருப்பைக் கழட்டி அடியுங்கள் – தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை சிவக்குமார் சுப்ரமணியன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 8ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெட்ரோல், கேஸ் விலை உயரும் போது எல்லாம் இப்படி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது. கேஸ் விலை உயர்வு அண்ணாமலை கையில் இல்லை. இனி கேஸ் விலை உயராது என்று அவரால் வாக்குறுதி அளிக்கவே முடியாது. விஷமத்தனமாக இந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பது தெரிந்தது. இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

இப்படி ஒரு அறிவிப்பை அண்ணாமலை செய்திருந்தால், அது மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. மேலும், இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக ஜூனியர் விகடன் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. 

2022 ஜூலை 6ம் தேதி ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. மேலும், ‘’அண்ணாமலை என்ன சொல்வார் என கருத்து கூறுங்கள்,’’ என்று ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் சமூக ஊடக பிரிவு பொறுப்பாளருக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும், இது போலியானது, என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் இனி கேஸ் விலை உயராது, என அண்ணாமலை கூறியதாகப் பரவும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கேஸ் விலை இனி உயர்த்தப்படாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சமையல் எரிவாயு விலை இனிமேல் உயர்த்தப்படாது என்று அண்ணாமலை அறிவித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False