ராமர் கோவில் திறப்பு: இறந்தவர்களை அடக்கம் செய்ய தடையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

ராமர் கோவில் திறப்பையொட்டி ஜனவரி 22, 2024 அன்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் தடை விதித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அயோத்தி ராமர் கோவில் புகைப்படத்துடன் பாலிமர் செய்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு 2024 ஜனவரி 20ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், “இறந்தவர்களை தகனம் செய்ய தடை. அயோத்தியில் ராமர் கோவிலில் பகவான் ஶ்ரீராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்படும் ஜன 22. 2024 அன்று இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் அவர்களை தகனம் செய்ய உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி ஜனவரி 22, 2024 அன்று இறந்தவர்களை தகனம் செய்யத் தடை விதித்து பாஜக ஆளும் மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. இப்படி ஏதாவது உத்தரவு வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போது பாலிமர் நியூஸ் வெளியிட்டது போல இல்லை. உத்தரப்பிரதேசம் என்பதை உத்திரபிரதேசம் என்று குறிப்பிட்டிருந்தனர். தேதிக்கு பிறகு காற்புள்ளி (கமா) போடுவதற்குப் பதில் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருந்தது. இவை எல்லாம் சந்தேகத்தை அதிகமாக்கியது. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

பாலிமர் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்த்தோம். ஜனவரி 20, 2024 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. ஆனால் அதில், “10 மாநிலங்களில் விடுமுறை. ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி நாளை மறுநாள் 6 மாநிலங்களில் பொதுவிடுமுறையும், 4 மாநிலங்களில் அரை நாள் விடுமுறையும் அறிவிப்பு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்ய பாலிமர் தொலைக்காட்சியின் ஆசிரியர் குழுவுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பிக் கேட்டோம். அவர்களும் இந்த நியூஸ் கார்டு உண்மையில்லை, எடிட் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். 

நம்முடைய ஆய்வில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பாஜக ஆளும் மாநில அரசுகள் தடை விதித்ததாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இந்த நியூஸ் கார்டு போலியானது என்று பாலிமர் உறுதி செய்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராமர் கோவில் திறப்பையொட்டி பாஜக ஆளும் மாநிலங்களில் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தடை என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமர் கோவில் திறப்பு: இறந்தவர்களை அடக்கம் செய்ய தடையா?

Written By: Chendur Pandian 

Result: False