FactCheck: இந்திரா காந்தி காலில் விழுந்தாரா கருணாநிதி?- முழு விவரம் இதோ!

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’இந்திரா காந்தி காலில் விழுந்த கருணாநிதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

அக்டோபர் 13, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதி, பெண்மணி ஒருவருக்கு மாலை அணிவித்த பின், அவரது காலில் விழுந்து வணங்குவதைக் காண முடிகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருவதோடு, ‘’#சர்க்காரியா_சுயமரியாதை 🤣😂😅 கலைஞர் இந்திரா காந்தி காலுக்கடியில் தவறிவிழுந்த அவரது முகக்கண்ணாடியை எடுத்து குடுக்கும் அறிய வீடியோ,’’ எனவும் குறிப்பிடுகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட வீடியோவில் உள்ள காட்சி பற்றி நாம் திமுக வட்டாரங்களில் விளக்கம் கேட்க தீர்மானித்தோம். இதன்படி, நமக்கு முதலில் தெரியவந்த விசயம், இதில் இருப்பவர் இந்திரா காந்தி இல்லை; ராணி அண்ணாதுரை (அண்ணா அவர்களின் மனைவி). 

இந்த வீடியோ, எடுக்கப்பட்டது 1987ம் ஆண்டில் என்றும், ஆனால், இந்திரா காந்தி 1984ம் ஆண்டே இறந்துவிட்டார் என்றும் தெரிவித்தனர்.

இதன்படி, இந்த வீடியோவில் இருக்கும் பெண்மணி கருணாநிதியை விட உயரம் குறைவானவராக உள்ளார். ஆனால், இந்திரா காந்தி, கருணாநிதிக்கு சற்று சமமான உயரத்தில்தான் இருப்பார்.  

இதேபோல, இந்திரா காந்தி, கருணாநிதியுடன் தோன்றும் புகைப்படம் ஒன்றையும் கீழே ஒப்பீட்டிற்காக இணைத்துள்ளோம்.

இதற்கடுத்தப்படியாக, குறிப்பிட்ட வீடியோவை முதலில் மதன் ரவிச்சந்திரன் போன்ற திமுக எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதனைப் பார்த்து மற்றவர்களும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். 

Madhan Ravichandran TweetArchived Link

குறிப்பிட்ட மதன் ரவிச்சந்திரனின் ட்வீட்டுக்கு, திமுக ஆதரவாளர் ஒருவர் விளக்கம் அளித்து, அதிலேயே கமெண்ட் பகிர்ந்திருந்தார். அதனை கீழே இணைத்துள்ளோம். 

Archived Link

பலரும் இதனை பகிரவே, இதுபற்றி தொலைக்காட்சி நேரலை விவாதம் ஒன்றில் பேசிய அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன் என்பவர் காட்டமாக விமர்சித்திருந்தார். ஆனால், அவரது குற்றச்சாட்டிற்கு அப்போதே விவாதத்தில் திமுக சார்பாக பங்கேற்ற கான்ஸ்டன்டைன் மறுப்பு கூறி பேசியிருந்தார்.

அந்த நிகழ்ச்சி வீடியோவின் லிங்கை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து, இதுதொடர்பாக திமுக ஆதரவாளர்கள் தரப்பில், விரிவான விளக்கம் அளித்து, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதில், சில ஆதாரங்களை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

மேற்கண்ட ட்வீட்டில், குறிப்பிட்ட வீடியோவை சற்று தெளிவுபடுத்தி காட்டியுள்ளனர். அதனை நன்கு பார்த்தாலே, அதில் இருப்பவர் இந்திரா காந்தி இல்லை என்று நமக்கு தெளிவாகப் புரியும். 

மேலும், இதுதொடர்பாக, தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் ஆய்வு செய்து, அதனை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Tamil.IndianExpress LinkArchived Link

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவரும் உண்மையின் விவரம்,

1) 1987ம் ஆண்டில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட போது, அண்ணாதுரையின் மனைவி ராணியின் காலில் விழுந்து, கருணாநிதி ஆசி பெற்றார். அந்த வீடியோவை எடுத்து, அதில் இருப்பவர் இந்திரா காந்தி எனக் கூறி பகிர்ந்து வருகின்றனர். இந்திரா காந்தி 1984ம் ஆண்டே இறந்துவிட்டார்.

2) மேலும், குறிப்பிட்ட வீடியோவை தெளிவாக இன்றி, சற்று மங்கலான முறையில் பலரும் பகிர்வதால், அதில் இருப்பவர் யார் என்ற தெளிவான பிம்பம் புரியாமல் மற்றவர்களும் குழம்புகின்றனர். ஆனால், திமுக ஆதரவாளர்கள் ராணி அண்ணாதுரையின் முகம் தெரியும்படி, அதே வீடியோவை தெளிவுபடுத்தி விளக்கம் கொடுத்துள்ளனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்திரா காந்தி காலில் விழுந்தாரா கருணாநிதி?- முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: False