FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதாகப் பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற சீக்கியர்கள் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சீக்கியர்கள் சிலர் பாகிஸ்தான் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்புகின்றனர். 

இந்த வீடியோவை Saravanan Vetrivel என்பவர் 2020 நவம்பர் 30ம் தேதி வெளியிட்டுள்ளார்.

Saravanan Vetrivelஐ போல பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வெளிநாட்டு வாழ் சீக்கியர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து பல தவறான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த புகைப்படத்தில் தனி நாடு கேட்டுப் போராடி வரும் அமைப்பின் கொடியையும் வைத்துள்ளனர். எனவே, தனிநாடு கேட்டு அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் வீடியோவை தற்போது விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி, விவசாயிகள் போராட்டத்தை பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

எனவே, இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பதற்கான ஆய்வை நாம் மேற்கொண்டோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை 2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்த போது, கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து எடுக்கப்பட்டது என்று தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Youtube I aninews.in I Archive 1  I tribuneindia.com I Archive 2

2019ம் ஆண்டு உலக கோப்பை போட்டி நடைபெற்ற போது ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தி மற்றும் வீடியோ நமக்கு கிடைத்தது. அதில் கிரிக்கெட் போட்டியில் அரசியலை கலந்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதே செய்தியை அப்போதே பல முன்னணி ஊடகங்கள் வெளியிட்டிருந்ததும் நமக்கு கிடைத்தன.

சமூக ஊடகங்களில் இந்த வீடியோ கிடைக்கிறதா என்று தேடினோம். பிரிவினை கோஷம் எழுப்பும் பதிவுகள், தகவல்கள் இந்திய சமூக ஊடகங்களில் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், இது தொடர்பான வீடியோக்கள், பதிவுகளை நம்மால் கண்டறிய முடியவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு சில வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. 2019ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அந்த வீடியோக்கள் மிகவும் தெளிவாகவும் இருந்தன. 

அசல் பதிவைக் காண: Youtube

வேளாண் மசோதாவை 2020 செப்டம்பரில்தான் மத்திய அரசு நிறைவேற்றி சட்டமாக்கியது. வேளாண் மசோதாவை ஒட்டித்தான் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. இதற்கு ஓராண்டுக்கு முன்பே பிரிவினைவாத கோஷம் எழுப்பும் இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பதிவிடப்பட்டு இருப்பது நமக்கு கிடைத்துள்ளது.

2019ல் இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட சீக்கியர்களின் பிரிவினை கோஷத்தை தற்போது 2020 விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புப்படுத்தி விஷமத்தனமாக வதந்தி பரப்பப்பட்டு வந்துள்ளது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நம்முடைய ஆய்வில் பிரிவினைவாத கோஷத்தை சீக்கியர்கள் எழுப்பும் வீடியோ 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் எடுக்கப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False