திமுக அரசு கட்டிய குடிநீர்த் தொட்டி சாய்ந்தது என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தி.மு.க அரசு கட்டிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சாயும் நிலையில் உள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பைசா நகர சாய்ந்த கோபும் மற்றும் சாய்ந்த நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புகைப்படங்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதல் படம் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். இரண்டாவது படம் பைசாவை கொள்ளை அடித்ததால் சாய்ந்த கோபுரம்.

#விடியா_திமுகமாடல் #ADMK_SLM #DMK_FAILS” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தரமில்லாமல் கட்டப்பட்டதால் சாய்ந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றின் புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பலரும் நேரடியாக இந்த புகைப்படம் தமிழ்நாட்டைச் சார்ந்தது என்று குறிப்பிடாமல் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், தி.மு.க அரசு கட்டியது போன்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சிலர் தி.மு.க அரசு கட்டியது என்று குறிப்பிடாமல் தி.மு.க அரசை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் இந்த மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திமுக அரசு கட்டியது போன்ற கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 2020ம் ஆண்டில் இந்த புகைப்படத்துடன் செய்தி ஊடகங்களில் வெளியான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். 2017ம் ஆண்டில் இருந்து கட்டப்பட்டு, 2020ன் தொடக்கத்தில் திறக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் சரியத் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: thenewsminute.com I Archive I newindianexpress.com I Archive

இது தொடர்பாக தெலுங்கானா அரசு அதிகாரி ஒருவர் அளித்த விளக்கத்தைப் பார்த்தோம். ரூ.15 லட்சம் செலவில் இந்த மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டியை கட்ட ஒப்பந்தம் செய்திருந்தோம். இந்த இடத்தை தேர்வு செய்தது ஊராட்சி நிர்வாகம். மண் பரிசோதனை செய்துவிட்டு ஒப்பந்ததாரர் ஃபவுண்டேஷன் வேலையை செய்தார். அதைத் தொடர்ந்து வேறு ஒரு ஒப்பந்ததாரர் கட்டுமானப் பணியை மேற்கொண்டார். நடுவில் பணிகள் நிறுத்தப்பட்டது. 8 மாதங்கள் கழித்து வேறு ஒரு ஒப்பந்ததாரர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைக் கட்டி முடித்தார். மண் பரிசோதனை செய்யப்பட்டிருந்தாலும், சில பகுதிகளில் மண் வலுவில்லாமல் இருந்துள்ளது. வலுவில்லாமல் உள்ள பகுதியில் கூடுதல் கட்டுமானம் செய்யப்பட்டு வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விழும் ஆபத்து இல்லை.

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மட்டுமே அரசு வழங்கியது. கட்டியது முழுக்க முழுக்க ஒப்பந்ததாரர்கள்தான். இதில் அரசு கட்டுமானத்தில் அரசு எந்த வகையிலும் ஈடுபடவில்லை” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தெலுங்கானாவில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் இந்த தொட்டி தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது. அப்போது பாரதிய ராஷ்டிரிய சமிதி ஆட்சி தெலுங்கானாவிலிருந்தது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான் இருந்தது. இதன் மூலம் தி.மு.க அரசு கட்டிய நீர்த்தேக்கத் தொட்டி சரிந்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தெலுங்கானாவில் 2020ம் ஆண்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்த மூன்றே மாதங்களில் சரியத் தொடங்கியது தொடர்பான புகைப்படத்தை எடுத்து தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:திமுக அரசு கட்டிய குடிநீர்த் தொட்டி சாய்ந்தது என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By:  Chendur Pandian 

Result: False

Leave a Reply