தீபாளி திருநாளில் இந்தியா ஒளிரும் காட்சி என்று செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டதாகவும் தற்போது காஷ்மீரிலும் கூட தீபாவளி கொண்டாடி வருவதை அந்த வரைபடம் காட்டுவதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்தியா ஒளிர்வது போன்று செயற்கைக்கோள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் அழகை சற்றுமுன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது செயற்கைக்கோள் மூலமாக புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது....கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது இந்தியா காஷ்மீர் மாநிலம் கூட தீபாவளியைக் கொண்டாடி வருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை C Chitra Devi Bjp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 25ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தீபாவளி பண்டிகை முடியும் போது எல்லாம் பட்டாசு மற்றும் ஒளி விளக்குகளால் இந்தியா ஒளிர்ந்ததாக நாசா செயற்கைக்கோள் புகைப்படம் வெளியிட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அப்படி ஏதும் வதந்தி பரப்பியுள்ளார்களா என்று சமூக ஊடகங்களில் பார்த்தோம்.

அப்போது, சற்று முன் நாசா வெளியிட்ட புகைப்படம் என்று ஒரு படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மோடி ஆட்சி காரணமாக தற்போது காஷ்மீர் மாநிலத்திலும் கூட தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இதே படத்தை 2011ம் ஆண்டுக்கு முன்பு இருந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதும், இது நாசா வெளியிட்டது இல்லை என்று அப்போது இருந்து ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதும் தெரிந்தது. 2011ம் ஆண்டில் businessinsider.in இணையதளத்தில் இந்த புகைப்படம் உண்மையானது இல்லை என்று கட்டுரை வெளியாகி இருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: businessinsider.com I Archive 1 I businessinsider.in I Archive 2

அந்த கட்டுரையில் இது செயற்கைக்கோள் புகைப்படம் இல்லை. நாசா எடுத்ததும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த படம் குறித்து நாசாவிடம் விசாரித்ததாகவும் 1992ம் ஆண்டுக்கும் 2003ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட மக்கள் தொகை பெருக்கம் பற்றிய படம் என்று அவர்கள் குறிப்பிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளையாக இருப்பது 1992க்கு முன்பிருந்த மக்கள் தொகை என்றும், நீல நிறம் 1992ம் ஆண்டு என்றும், பச்சை நிறம் 1998ம் ஆண்டு என்றும், சிவப்பு நிறம் 2003ம் ஆண்டு மக்கள் தொகையை குறிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர். மற்றொரு கட்டுரையில் இந்த புகைப்படம் 2003ம் ஆண்டில் அமெரிக்காவின் National Oceanic and Atmospheric Administration ( NOAA) உருவாக்கியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாசா இந்த புகைப்படத்தை வெளியிட்டதா என்று அறிய அதன் இணையதளத்தில் தேடினோம். அப்போது, 2012ம் ஆண்டில் தீபாவளி பண்டிகையன்று இந்தியாவின் புகைப்படத்தை நாசாவின் செயற்கைக்கோள் எடுத்ததாக குறிப்பிட்டு ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் வெளியாகி இருந்தது. அதிலும், காஷ்மீர் பகுதியில் வெளிச்சமாக இருப்பதைக் காண முடிந்தது. 2012ம் ஆண்டில் மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

Archive

இதன் மூலம் மிகவும் பழைய படத்தை, 2022 தீபாவளி பண்டிகையன்று நாசா எடுத்த புகைப்படம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தீபாவளி பண்டிகையின் போது இந்தியா ஒளிர்ந்ததை நாசா செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்தது என்று பரவும் படம் நாசா வெளியிட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தீபாவளி இரவில் இந்தியா என்று நாசா செயற்கைக்கோள் படம் வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False