எல்.கே.ஜி மாணவர்களைக் கண்டிக்க தமிழ்நாடு ஆளுநர் ரவி-யிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மனு அளித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு ஆளுநர் ரவியை பா.ஜ.க தலைவர் எல்.அண்ணாமலை உள்ளிட்டவர்கள் சந்தித்த படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் "LKG மாணவர்களை கண்டிக்க பாஜக நிர்வாகிகள் சந்திப்பு" என்று இருந்தது. நிலைத் தகவலில், "LKG மாணவர்களை ஃபயில் ஆக்கிவிட வேண்டும் என்று. பாஜக நிர்வாகிகள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர் .." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை தாஜு தீன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றில் பிரதமர் மோடியைக் கிண்டல் செய்ததாக பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேரடியாக பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், மோடி கொண்டு வந்த திட்டங்களை கிண்டல் செய்யும் வகையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்தார். மத்திய அரசு தரப்பில் இருந்து தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் மோடியைக் கிண்டல் செய்த சிறுவர்களைக் கண்டிக்க, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் மனு அளித்தார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இந்த படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive 1 I oneindia.com I Archive 2

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் 2021 அக்டோபர் 12ம் தேதி ஊடகங்களில் வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில் தி.மு.க எம்.பி-க்கள் மீதான வழக்கு விசாரணையை நேரில் கண்காணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடிய போது தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையே கூட இந்த புகைப்படத்தை 2021 அக்டோபர் 12ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், "தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளை கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேதகு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தோம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

Archive

ஜீ டி.வி-யில் பிரதமர் மோடியைக் கிண்டல் செய்யும் வகையில் இடம் பெற்ற ரியாலிட்டி ஷோ 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது ஒளிபரப்பப்பட்டது. ஆனால், இந்த புகைப்படம் 2021 அக்டோபரிலேயே எடுக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் எல்.கே.ஜி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆளுநரிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எல்கேஜி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநரிடம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மனு அளித்தார் என்று பகிரப்படும் படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:எல்.கே.ஜி மாணவன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் புகார் மனு கொடுத்தாரா அண்ணாமலை?

Fact Check By: Chendur Pandian

Result: False