அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கூடம் ஒன்றில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பள்ளி மாணவர்கள் போன்று சீருடை அணிந்த சிலர் தமிழ் சினிமா பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஸ்கூல்ல யே *** கூட்டி குடுத்தா எவன்டா கல்யாணம் பண்ணுவான்” என்று ஆபாசமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “அரசுப் பள்ளியில் நடந்த *”ஆடலும் பாடலும்”* நிகழ்ச்சி..!🖤♥️_ *பெற்றோர்களே உஷார்* *திமுக ஆட்சியில் பிள்ளைகளைப் பெத்தவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்க*

*திமுக அப்பாவ வாழ்த்துறாங்க.* ஒரு சினிமா ரசிகர் மன்றத் தலைவன் கல்வி அமைச்சராக இருந்தால் அந்தப் பள்ளிக்கூடத்தில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.😭 *அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவச் செல்வங்கள் எப்படியாவது நாசமா கெட்டு ஒழிந்து போகவேண்டும்😫 என்று சிந்திக்கிறான் திமுக காரன்.* மக்களே! உங்கள் பிள்ளைகள் நல்வாழ்வு உங்கள் கையில்தான் உள்ளது🙏🙏🙏 *கவனமாக இருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களின் படிப்புக்கு வேட்டு வைக்கும் வேலையை சிலர் செய்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் தரமற்றதாக இருக்கும், மாணவர்களை தவறாக வழிநடத்தும் என்பது போன்ற கருத்தைப் பரப்பி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை நிறுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் அடித்துக் கொண்டனர் என்று வதந்தி பரப்பினர். தற்போது, அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.

இந்த வீடியோவில் உள்ளவர்களைப் பார்க்கும் போது மாணவர்கள் போலத் தெரியவில்லை. மாணவர்கள் போன்று உடை அணிந்து நடனமாடுபவர்கள் போல உள்ளனர். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஈரோடு புகழ் Dr. தர்மா வின் டைட்டானிக் குழுவினரின் நடன நிகழ்ச்சி என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் வேறு கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்ததைக் காண முடிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் முழு மேடையையும் காட்டவில்லை. ஆனால், நமக்குக் கிடைத்த யூடியூப் வீடியோவில் முழு மேடையையும் முழுவதுமாக காண முடிகிறது. அதில், “டைட்டானிக் குழுவினரின் நடன நிகழ்ச்சி” என்று பேனர் கட்டப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அந்த யூடியூப் சேனலில் வேறு பல கிராமங்களில் நடந்த திருவிழா நிகழ்ச்சிகளும் இருந்தன. 

இதன் மூலம் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கிராமங்களில் நடத்தும் ஆடலும் பாடலும் என்ற நிகழ்ச்சியின் வீடியோவை எடுத்து பள்ளிக் கூடத்தில் ஆடலும் பாடலும் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது மாணவர்களின் கல்வி விஷயத்தில் தவறான தகவலை பரப்பும் வகையில் பகிரப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை தடுக்கும் வகையில் தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் ஆபாசமான நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதா?

Written By: Chendur Pandian  

Result: False