தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால் தவெக-வினர் தெறித்து ஓடினார்களா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த த.வெ.க-வினர் தப்பி ஓடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

த.வெ.க-வினர் தப்பி ஓடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “காவலர்களை பார்த்ததும் தெறித்து ஓடிய விஜய் ரசிகர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு – செய்தி நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டதை அடுத்து போரட்ட களத்தில் இருந்த தவெகவினர் ஓட்டம்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களை கலைந்து செல்லும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு பற்றிய தகவல் தெரிந்ததும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் தப்பி ஓடியதாக வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு வக்ஃப் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டபோது அதைக் கண்டித்து தவெக-வினர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் கைது செய்யப்போகிறார்கள் என்று தகவல் கிடைக்கவே, தொண்டர்கள் தப்பி ஓடியதாக செய்தி மற்றும் வீடியோ வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை இப்போது வெளியிட்டிருப்பது போன்று தெரிந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை 2025 ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து இது தொடர்பாக தேடிய போது இதே வீடியோவை சில ஊடகங்களும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஏப்ரல் 4, 2025 அன்று நக்கீரன் வெளியிட்டிருந்த செய்தியில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சிகள் இருந்தது. 

அந்த செய்தியில், ” வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தவெக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை அமைந்தகரை பகுதியில் அனுமதியின்றி தவெக கட்சியினர் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில் தவெக-வினர் குறுகிய தெருவில் தெறித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பழையது என்பதை உறுதி செய்தன.

உண்மைப் பதிவைக் காண: nakkheeran.in I Archive

2025 ஏப்ரலில் வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக-வினர் நடத்திய போராட்டத்தின் போது தொண்டர்கள் தப்பி ஓடிய காட்சியை எடுத்து சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தின் போது தப்பி ஓடிய தவெக தொண்டர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2025 ஏப்ரலில் வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால் போராட்டக் களத்தில் இருந்து தெறித்து ஓடிய தவெக-வினர் என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால் தவெக-வினர் தெறித்து ஓடினார்களா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply