“பஞ்சாப் வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவிய ஆர்எஸ்எஸ்” என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்தான் உதவி செய்து வருகிறார்கள் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மழை நீர் தேங்கியுள்ள இடத்தில் உள்ளவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உணவு வழங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ் 🚩

போராடிய எந்த விவசாயிகளாவது பஞ்சாப் மழை வெள்ளத்தில் உதவி செய்து பார்த்ததுண்டா? ஆனால் சங்க ஸ்வயம் சேவகர்கள் களத்தில் நிற்கிறார்கள் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பஞ்சாபில் கன மழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டுமே உதவி செய்வது போன்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வழக்கமாக பழைய வீடியோ, புகைப்படங்களை எடுத்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவி செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவது வழக்கம் என்பதால் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மூன்று, நான்கு மாதங்களாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆகஸ்ட் 5, 2025 அன்று பீகாரில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

ஜூலை 29, 2025 அன்று இதே வீடியோவை ராஜஸ்தானில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உணவு வழங்கி உதவி செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னும் ஒடிசா உள்ளிட்ட வேறு பகுதிகளைக் குறிப்பிட்டும் வேறு சில பதிவுகளும் நமக்கு கிடைத்தன. ராஜஸ்தான் என்று குறிப்பிட்டு வெளியான பதிவில் மட்டும் இது ராம்கஞ்ச் மண்டி என்ற இடத்தில் செய்யப்பட்ட நிவாரண உதவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பகுதியில் ஜூலை இறுதியில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதா என்று தேடியபோது, வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவி செய்தார்கள் என்றும் பல செய்திகள் நமக்கு கிடைத்தன.

பஞ்சாப் வெள்ளம் ஆகஸ்ட் இறுதியில் ஏற்பட்டது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை 2025 ஜூலையிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உணவு வழங்கி உதவி செய்தார்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராஜஸ்தானில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மக்களுக்கு உணவு வழங்கிய வீடியோவை எடுத்து பஞ்சாபில் களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“பஞ்சாப் வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவிய ஆர்எஸ்எஸ்” என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply